தமிழகம்

ஒருகால பூஜை திட்டத்தில் 1,000 கோயில்கள் இணைப்பு: அர்ச்சகர்களுக்கு ரூ.1,500 ஊக்கத்தொகை வழங்கினார் முதல்வர்

செய்திப்பிரிவு

சென்னை: ஒருகால பூஜை திட்டத்தில் ஆயிரம் கோயில்களை இணைக்க ரூ.25 கோடி நிதி, அர்ச்சகர்களுக்கு உயர்த்தப்பட்ட ஊக்கத்தொகை ரூ.1.500 மற்றும் 19 ஆயிரம் கோயில்களுக்கு ரூ.8.58 கோடி செலவில் பூஜை உபகரணங்களை முதல்வர் ஸ்டாலின் வழங்கினார்.

இதுகுறித்து தமிழக அரசு வெளியிட்ட செய்திக்குறிப்பில் கூறப்பட்டுள்ளதாவது: ஒருகால பூஜை திட்டத்தின்கீழ் ஏற்கெனவே 18 ஆயிரம் கோயில்கள் பயனடைந்து வரும் நிலையில், இந்த ஆண்டு நிதி வசதியற்ற 1,000 கோயில்களுக்கு இத்திட்டம் விரிவுபடுத்தப்படும் என்று சட்டப்பேரவையில் அறிவிக்கப்பட்டது.

          

இதை செயல்படுத்தும் விதமாக, வைப்புநிதியாக முதலீடு செய்யும் வகையில், மின்விசை நிதி நிறுவனத்தின் இயக்குநரிடம் ரூ,25 கோடிக்கான காசோலையை முதல்வர் ஸ்டாலின் வழங்கினார். தொடர்ந்து, ஒருகால பூஜை திட்ட கோயில்களின் அர்ச்சகர்களுக்கு உயர்த்தப்பட்ட மாதாந்திர ஊக்கத் தொகையான ரூ.1,500 வழங்கும் அடையாளமாக 10 அர்ச்சகர்களுக்கு காசோலையை வழங்கினார்.

பூஜை உபகரணங்கள்: ஏற்கெனவே அறிவிக்கப்பட்டதன் அடிப்படையில், ரூ.8.58 கோடி செலவில் 19 ஆயிரம் ஒருகால பூஜை திட்ட கோயில்களுக்கு கொள்முதல் செய்யப்பட்ட பூஜை உபகரணங்களை வழங்கும் அடையாளமாக 50 கோயில்களின் அர்ச்சகர்களிடம் வழங்கினார்.

ஒவ்வொரு கோயிலுக் கும் ரூ.4,515 செலவில் பித்தளை தாம்பாளம், தட்டு (3 கிண்ணங்களுடன்), சொம்பு, தூபக்கால், மணி, காமாட்சிவிளக்கு மற்றும் பஞ்சபாத்திரம் ஆகியவை வழங்கப்பட்டுள்ளன.

இந்த நிகழ்வில், துணைமுதல்வர் உதயநிதி ஸ்டாலின், அமைச்சர் சேகர்பாபு,தலைமைச் செயலர் நா.முருகானந்தம், அறநிலையத் துறைச் செயலர் க.மணிவாசன், துறை ஆணையர் பி.என்.ஸ்ரீதர், கூடுதல் ஆணையர்கள் துரை.ரவிச்சந்திரன், கோ.செ.மங்கையர்க்கரசி உள்ளிட்டோர் பங்கேற்றனர். இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.

SCROLL FOR NEXT