சென்னை: நீண்டகாலமாக இந்தியாவில் வசிக்கும் இலங்கைத் தமிழர்களுக்கு இந்திய அரசு குடியுரிமை வழங்கும் வரை திமுகவின் குரல் தொடர்ந்து ஒலிக்கும் என்று முதல்வர் மு.க.ஸ்டாலின் தெரிவித்துள்ளார்.
கன்னியாகுமரி மாவட்டம் பெருமாள்புரத்தில் இலங்கைத் தமிழர் மறுவாழ்வு முகாமில் புதிதாகக் கட்டப்பட்டுள்ள 90 வீடுகளை திறந்து வைத்த பின்னர், முதல்வர் ஸ்டாலின் வெளியிட்ட சமூக வலைதளப் பதிவில், ‘இலங்கைத் தமிழ்ச் சொந்தங்களுக்கு நிரந்தரக் குடியிருப்புகளை வழங்கி வருகிறோம். நிரந்தரக் குடியுரிமையும் பெற்றுத் தரப் போராடுவோம்.
இலங்கைத் தமிழர்களுக்கு வீடுகள், அவர்களின் குழந்தைகள் உயர்கல்வி பயில 3 கல்வியாண்டுகளில் 5,771 மாணவர்களுக்கு ரூ.11.07 கோடி கல்வி உதவித்தொகை மற்றும் சுயஉதவிக் குழுக்களுக்கு நிதி, திறன் மேம்பாட்டுப் பயிற்சி உள்ளிட்டை வழங்கி, அவர்களின் வாழ்வாதாரம் பாதுகாக்கப்பட்டு வருகிறது.
நீண்டகாலமாக இந்தியாவில் வசித்து வருவோருக்கு நியாயமாகக் கிடைக்க வேண்டிய குடியுரிமையை இந்திய அரசு விரைந்து வழங்கும் என்று எதிர்பார்க்கிறோம். அதுவரை நம் குரல், தமிழ்ச் சொந்தங்களுக்காகத் தொடர்ந்து ஒலிக்கும்’ முதல்வர் ஸ்டாலின் தெரிவித்துள்ளார்.