சென்னை: அதிமுக பொதுச் செயலாளர் பழனிசாமியின் டெல்லி பயணத்தை முதல்வர் ஸ்டாலின் விமர்சித்த நிலையில், முன்னாள் முதல்வர் கருணாநிதியின் டெல்லி பயணத்தை சுட்டிக்காட்டி, அதிமுக ஐடி பிரிவு பதில் கொடுத்துள்ளது.
அதிமுக பொதுச் செயலாளர் பழனிசாமி நேற்று முன்தினம் டெல்லி சென்று, என்டிஏ கூட்டணியில் தொகுதிப் பங்கீடு குறித்து உள்துறை அமைச்சர் அமித் ஷாவுடன் ஆலோசனை நடத்தினார்.
இதை விமர்சித்து முதல்வர் ஸ்டாலின் நேற்று தனது சமூக வலைதளப் பதிவில் கூறியுள்ளதாவது: எதிர்க்கட்சித் தலைவரும், சகாக்களும் டெல்லியில் இருப்பது எதற்காக? தமிழகத்துக்கு வழங்கப்படாமல் வஞ்சிக்கப்படும் நிதியை வாங்கித் தருவதற்கா? தமிழகத்தில் நிறைவேற்றப்படாமல் முடக்கப்பட்ட திட்டங்களை நிறைவேற்ற வேண்டும் என்று வலியுறுத்தவா? சிலிண்டர் தட்டுப்பாட்டைப் போக்கவா? இல்லை.
தேர்தல் களத்தைச் சந்திக்கவே டெல்லியின் சம்மதம் வேண்டும் என்கிற நிலையில் உள்ளவர்களின் கையில் தமிழகம் சிக்கினால், ஒவ்வொரு நாளும் என்ன பாடுபட வேண்டியிருக்கும்.
சுயநலனுக்காக சொந்தக் கட்சியை அடமானம் வைத்ததுபோல, தமிழகத்தையும் டெல்லியிடம் அடகு வைக்கத் தயங்காதவர்கள் அவர்கள். இவ்வாறு முதல்வர் தெரிவித்துள்ளார்.
இதற்கு பதில் தரும் விதமாக, அதிமுக தகவல் தொழில்நுட்ப பிரிவு வெளியிட்ட பதிவில் கூறியுள்ளதாவது: டெல்லிக்கு சென்று கூட்டணி பேசுகின்றனர் என்று புலம்புகிறார் ஸ்டாலின்.
2011 தேர்தலுக்காக நீங்களும், உங்கள் தந்தை கருணாநிதியும் டெல்லியில் காங்கிரஸ் தலைமைக்காக 6 மணி நேரத்துக்கு மேல் காத்திருந்து கூட்டணி பேசினீர்களே.
உங்கள் குடும்பத்துக்கு ஒரு பிரச்சினை என்றதும், மகளுக்கு ‘திஹார்’ என்று காங்கிரஸ் சொல்ல, ‘பகீர்’ என்று பதறி, வயதான காலத்திலும் டெல்லிக்கு சென்று, தீர்ப்புக்கு சில நிமிடங்கள் முன்பு சோனியா காந்தியை சந்தித்தாரே கருணாநிதி.
அறிவாலய மேல் மாடி ரெய்டை பார்த்து பயந்து, கீழ் மாடியில் “63 நாயன்மார்களை கொடுக்கிறேன்” என்றும் கூட்டணி பேசினாரே. தென் தமிழக மக்கள் வெள்ளத்தில் தத்தளித்தபோது, மக்கள் எக்கேடு கெட்டுப்போனால் என்ன என்று நீங்கள் டெல்லியில் இண்டியா கூட்டணி பேச்சுவார்த்தை நடத்தினீர்களே. அடுத்தவர்களை விமர்சிக்க உங்களுக்கு தகுதி இல்லை. இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.