மதுரை காந்தி நினைவு அருங்காட்சியகத்தில் கமல் பண்பாட்டு மையம் சார்பில் நடைபெற்ற நிகழ்ச்சியில் முதல்வர் மு.க.ஸ்டாலினுக்கு நினைவுப் பரிசு வழங்கிய மநீம தலைவர் கமல்ஹாசன். உடன், கூட்டணி கட்சித் தலைவர்கள். படம்: எஸ்.கிருஷ்ணமூர்த்தி
மதுரை: காந்தியடிகளை மக்கள் மனதிலிருந்து அகற்ற மத்திய பாஜக அரசு திட்டமிட்டுள்ளது என்று முதல்வர் மு.க.ஸ்டாலின் பேசினார்.
மக்கள் நீதி மய்யத்தின் கமல் பண்பாட்டு மையம் சார்பில், காந்தியையும் அவரது சகோதரர்களையும் நினைவுகூரும் ‘மறவோம்’ எனும் நிகழ்ச்சி கட்சி தலைவர் கமல்ஹாசன் தலைமையில் மதுரை காந்தி நினைவு அருங்காட்சியகத்தில் நேற்று நடைபெற்றது. எழுத்தாளர் செல்வேந்திரன் வரவேற்றார்.
இந்நிகழ்ச்சியில், முதல்வர் மு.க.ஸ்டாலின் பேசியதாவது: காந்தி என்றவுடன் நமக்கு நினைவுக்கு வருவது அரையாடைதான். அந்த அரையாடையுடன் அவர் முதன்முதலில் தோன்றிய மதுரையி்ல் இந்நிகழ்ச்சி நடப்பது மிகவும் பொருத்தமானது. காந்தியைப் பின்பற்றிய பெரியார், பின்னாளில் அவருடன் முரண்பட்டாலும், அவர் கொல்லப்பட்டபோது இந்திய நாட்டுக்கு ‘காந்தி தேசம்’ என பெயர் சூட்ட வேண்டும் என்று கூறினார்.
காந்தியை மக்கள் மனதிலிருந்து அகற்ற வேண்டும் என மத்திய பாஜக அரசு திட்டமிட்டுள்ளது. காந்தி என்ற பெயரே இருக்கக் கூடாது என 100 நாள் வேலைதிட்டத்திலிருந்து அவரது பெயரை நீக்கினர். ரூபாய் நோட்டிலிருந்தும் காந்தியை எடுத்தாலும் எடுத்துவிடுவார்கள். வெறுப்பு அரசியலைத் திணிக்கிற ஒரு கட்சி மத்தியில் ஆளும் காலத்தில், காந்தியத்தை நம் நாடு இறுகப் பற்றிக்கொள்ள வேண்டும் என வலியுறுத்துவதுதான் இந்நிகழ்ச்சியின் நோக்கம். இந்து - முஸ்லிம் ஒற்றுமையின் அடையாளம் காந்தி.
இந்தியா அனைவருக்குமான நாடு என்ற கருத்தியல்தான் காந்தி. இதனால் தான் மதத்தை வைத்து அரசியல்பிழைப்பு நடத்தும் அற்பர்களுக்கு காந்தியைப் பிடிக்கவில்லை. அண்மையில் பாஜகவைச் சேர்ந்த ஒரு முதல்வரே முஸ்லிம்களுக்கு எதிராக வன்முறையைத் தூண்டுவதைப் பார்த்திருப்பீர்கள். இதைச் சொல்வதற்கே எனக்கு வெட்கமாக இருக்கிறது.
ஆனால் எந்த வெட்கமும் இல்லாமல் இப்படியான செயல்களில் அவர்கள் ஈடுபடுகிறார்கள். சமூக ரீதியாக, கல்வி ரீதியாக பிற்படுத்தப்பட்ட முஸ்லிம்களுக்கு இடஒதுக்கீடு கொடுக்கக் கூடாது என்று கருதுகிறார்கள். காந்தியடிகள் வலியுறுத்திய மதநல்லிணக்கம்தான் தற்போது இந்தியாவுக்கு தேவை. சமநீதி, சமூக நீதிக்காக கமல்ஹாசனின் குரல் தொடர்ந்து ஒலிக்கட்டும். காந்தியடிகள் வலியுறுத்திய அன்பின் பாதையை பாதுகாக்க நாம் ஒன்றிணைவோம். இவ்வாறு அவர் பேசினார்.
இந்நிகழ்ச்சியில், மதிமுக பொதுச் செயலாளர் வைகோ, காங்கிரஸ் மாநிலத் தலைவர் செல்வப்பெருந்தகை, மார்க்சிஸ்ட் மாநிலச் செயலாளர் பெ.சண்முகம், இந்திய கம்யூனிஸ்ட் மாநிலச் செயலாளர் வீரபாண்டியன், விசிக தலைவர் திருமாவளவன், தமிழக வாழ்வுரிமை கட்சி தலைவர் வேல்முருகன், இந்திய யூனியன் முஸ்லிம் லீக் கட்சி தேசியத் தலைவர் கே.எம்.காதர் மொகிதீன், மனிதநேய மக்கள் கட்சித் தலைவர் ஜவாஹிருல்லா, கொமதேக துணைப் பொதுச் செயலாளர் நித்தியானந்தன் ஆகியோர் பங்கேற்றனர்.