சென்னை: தமிழகத்தில் ஓய்வுபெற்ற 42 பத்திரிகையாளர்களுக்கு, மாதம் ரூ.12 ஆயிரம் ஓய்வூதியத்துக்கான ஆணைகளை முதல்வர் மு.க.ஸ்டாலின் நேற்று வழங்கினார்.
இதுகுறித்து தமிழக அரசு வெளியிட்ட செய்திக்குறிப்பு: பேரிடர் காலங்களிலும் புயல், மழை, பெருவெள்ளத்தால் பொது மக்கள் பாதிக்கப்படும்போதும் பெரும் விபத்துகள், தொற்று நோய்ப் பரவல்கள் முதலிய சோதனைக் காலங்களிலும் இரவு பகல் பாராது ஓய்வின்றி பணி செய்து, உண்மைச் செய்திகளைத் திரட்டி மக்களிடம் கொண்டு சேர்த்து வரும், பத்திரிகையாளர்களின் பணியை சிறப்பிக்கும் வகையில் தமிழகத்தில் முதன்முறையாக உழைக்கும் பத்திரிகையாளர்களை முன்களப் பணியாளர்களாக முதல்வர் ஸ்டாலின் அறிவித்தார்.
திமுக அரசு பொறுப்பேற்ற பின் செய்தி மக்கள் தொடர்புத் துறையின்கீழ் பத்திரிகையாளர் நலவாரியம் உருவாக்கப்பட்டு, உழைக்கும் பத்திரிகையாளர் களின் குடும்பத்துக்கு நலத்திட்ட உதவிகள் கடந்தாண்டு மார்ச் மாதம் முதல் வழங்கப்பட்டு வருகிறது. வாரியத்தில் தற்போது வரை 3,674 பேர்உறுப்பினர்களாக சேர்க்கப்பட்டு, 81 பத்திரிகையாளர்களுக்கு ரூ.8 லட்சத்து 56,500 உதவித் தொகை வழங்கப்பட்டுள்ளது.
மேலும், பத்திரிகையாளர் மாதாந்திர ஓய்வூதியம் ரூ.12 ஆயிரமாக உயர்த்தப்பட்டு, 356 பத்திரிகையாளர்களுக்கு வழங்கப்பட்டு வருகிறது. குடும்ப ஓய்வூதியம் ரூ.6 ஆயிரமாக உயர்த்தப்பட்டு 72 பேர் குடும்பத்துக்கு வழங்கப்படுகிறது.
மேலும், 59 பத்திரிகையாளர் குடும்பங்களுக்கு ரூ.2.09 கோடி குடும்ப நல நிதி வழங்கப்படுகிறது. பத்திரிகை துறையில் ஆசிரியர், உதவி ஆசிரியர், புகைப்படக்காரர், பிழை திருத்துநர் ஆகியோர் பணிக்காலத்தில் மறைந்தால், அவர்கள் குடும்பத்துக்கு முதல்வர் பொது நிவாரண நிதியில் இருந்து வழங்கப்படும் குடும்ப உதவி நிதி ரூ.2.50 லட்சம், ரூ.5 லட்சம், ரூ.7.50 லட்சம், ரூ.10 லட்சம் என இருமடங்காக உயர்த்தப்பட்டுள்ளது.
மேலும், பத்திரிகையாளர்களுக்கான மருத்துவ உதவித்தொகையாக இதுவரை 16 பத்திரிகையாளர்களுக்கு ரூ.30.61 லட்சம் வழங்கப்பட்டுள்ளது.
பத்திரிகைத் துறையிலிருந்து ஓய்வுபெற்று நலிந்த நிலையில் உள்ள 42 பத்திரிகையாளர்களுக்கு, பத்திரிகையாளர் ஓய்வூதியத் திட்டத்தின்கீழ் மாதந்திர ஓய்வூதியமாக தலா ரூ.12 ஆயிரம் வழங்க கடந்த நவ.27-ம் தேதி அரசாணை வெளியிடப்பட்டது. அதன்படி, நேற்று தலைமைச் செயலகத்தில் நடைபெற்ற நிகழ்ச்சியில் 42 பத்திரிகையாளர்களுக்கும் தலா ரூ. 12 ஆயிரம் மாதாந்திர ஓய்வூதியத்துக்கான ஆணைகளை முதல்வர் வழங்கினார்.
நிகழ்ச்சியில் அமைச்சர் மு.பெ.சாமிநாதன், தலைமைச் செயலர் நா.முருகானந்தம், செய்தித்துறை செயலர் வே.ராஜாராமன், செய்தித்துறை இயக்குநர் இரா.வைத்திநாதன், கூடுதல் இயக்குநர்கள் ச.செல்வராஜ், ஆர்.பாஸ்கரன் ஆகியோர் பங்கேற்றனர்.