தமிழகம்

கும்பகோணம் | திமுக-தவெக நிர்வாகிகள் மோதிக் கொண்டதால் பரபரப்பு!

சி.எஸ். ஆறுமுகம்

கும்பகோணம்: கும்பகோணத்தில் திமுக-தவெக கட்சி நிர்வாகிகள் மோதிக் கொண்டதால் பரபரப்பு ஏற்பட்டது.

கும்பகோணம் தொகுதி வேட்பாளராக திமுக சார்பில் சாக்கோட்டை க.அன்பழகன், தமிழக வெற்றி கழகம் சார்பில் வினோத், தமாகா சார்பில் அசோக்குமார், நாம் தமிழர் கட்சி சார்பில் ஆனந்த் ஆகியோர் போட்டியிடுகின்றனர். இந்தநிலையில் கும்பகோணம், துக்காபாளையத்தெரு 17-வது வார்டு பகுதியில் தமிழக வெற்றி கழகத்தினர் தேர்தல் பிரச்சாரத்தில் ஈடுபட்டிருந்தனர்.

அப்போது அதே வார்டில் திமுக சார்பில் தேர்தல் பிரச்சாரம் மேற்கொண்டிருந்தவர்கள் ரூ. 8 ஆயிரத்திற்கான கூப்பனை வழங்கியதாக கூறப்படுகிறது. அப்போது இது தொடர்பாக தவெகவினர் கேட்ட போது, இரு தரப்பினரிடையே மோதல் உருவாகி கைகலப்பானது. இதில் 17-வது வார்டு திமுக செயலாளர் சபாபதி உள்பட 2 பேர், தமிழக வெற்றி கழக மாநகர செயலாளர் முருகானந்தம் உள்ளிட்டோர் பலத்த காயமடைந்து கும்பகோணம் அரசு மருத்துவமனையில் சிகிச்சைக்காக அனுமதிக்கப்பட்டுள்ளனர். இது தொடர்பாக 2 கட்சிகளை சேர்ந்த நிர்வாகிகள் தேர்தல் நடத்தும் அலுலவரிடம் புகார் அளித்துள்ளனர்.

          

இதனிடையை, தவெகவினரை தாக்கிய திமுக மாநகர செயலாளர் சு.ப.தமிழழகனை கைது செய்ய வலியுறுத்தி காந்தி பூங்கா அருகில் தவெக வேட்பாளர வினோத் தலைமையில் அக்கட்சியினர் நிர்வாகி கழுத்தில் இருந்த தங்க செயினை திமுகவினர் பறித்ததால், அறுந்த தங்க செயினை காட்டி சாலை மறியல் போராட்டத்தில் ஈடுபட்டனர்.

பின்னர், அந்த இடத்திற்கு வந்த கிழக்கு காவல் நிலைய போலீஸார், தவெகவினரிடம் தேர்தல் நடத்தை விதிமுறைகள் நடைமுறையில் இருப்பதால், தேர்தல் நடத்தும் அதிகாரிகளிடம் புகாரளிக்க வேண்டும் என கூறியதையடுத்து, தவெகவினர் போராட்டத்தை கைவிட்டு அந்த இடத்தில் இருந்து கலைந்து சென்றனர். இதனால் கும்பகோணத்தில் பரபரப்பு ஏற்பட்டது. அரசு மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டவர்களுக்கு சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது.

இது தொடர்பாக திமுக மாநகர செயலாளர் சுப.தமிழழகன் கூறியது: நாங்கள் திமுக திட்டங்கள் அச்சிட்ட துண்டு பிரசுரங்களை பொதுமக்களிடம் வழங்கி வாக்கு சேகரித்துக்கொண்டிருந்த போது., தவெகவினர் அங்கு வந்து, அந்த துண்டு பிரசுரங்களை வழங்ககூடாது என கூறி எங்களிடம் தகராறு செய்ததால், கைகலப்பானது, இதில் எங்கள் கட்சியை சேர்ந்த 17-வது வார்டு செயலாளர் சபாபதி, மாநகர இளைஞரணி அமைப்பாளர் மணிகண்டன் ஆகிய 2 பேர் பலத்த காயமடைந்ததால் அவர்கள் கும்பகோணம் அரசு மருத்துவமனையில் சிகிச்சைக்காக அனுமதிக்கப்பட்டுள்ளனர், இது தொடர்பாக தேர்தல் நடத்தும் அலுவலரிடம் உரிய நடவடிக்கை மேற்கொள்ள வேண்டும் என புகாரளித்துள்ளேன் என்றார் அவர்,

இது தொடர்பாக தவெக வேட்பாளர் வினோத் கூறியது: துக்காம்பாளையத்தெருவில் வாக்கு சேகரித்துக்கொண்டிருந்த போது, அங்கு வந்த மாநகர செயலாளர் சு.ப.தமிழழகன் தலைமையிலான திமுகவினர், ரூ. 8 ஆயிரம் கூப்பன் வழங்கியதை தட்டிக்கேட்டோம். பின்னர், அந்தப் பகுதியில் உள்ளவர்களிடம், தவெகவினர் வந்தால் விரட்டியடியுங்கள் என்றதும், அங்கிருந்த பொதுமக்கள் எங்களிடம் தெரிவித்தனர். இது தொடர்பாக திமுகவினரிடம் கேட்ட போது, தள்ளு முள்ளு ஏற்பட்டு கைகலப்பாகி மோதலானது.

இதில் மாவட்ட பொருளாளர் விஜயசந்திரனின் தங்க செயினை அறுத்து, மாநகர செயலாளர் முருகானந்தத்தை தாக்கி பெண்களிடம் தகாத முறையில் நடந்து கொண்டனர். இதனால் அதிர்ச்சியடைந்த நாங்கள், திரண்டு, அங்கிருந்த ஊர்வலமாக புறப்பட்டு, காந்தி பூங்கா நால்ரோட்டில் சாலை மறியலில் ஈடுபட்டு, அறுத்த தங்க செயினை காட்டி, திமுக மாநகர செயலாளர் சு.ப.தமிழழகனை கைது செய்ய வேண்டும் என முழக்கமிட்டோம். பின்னர் போலீஸார் கேட்டுக்கொண்டதற்கிணங்க மறியலை கைவிட்டு, தேர்தல் நடத்தும் அலுவலரிடம் புகாரளித்துள்ளோம் என்றார் அவர்.

SCROLL FOR NEXT