சென்னை: இந்திய கம்யூனிஸ்ட் கட்சியின் மூத்த தலைவர் இரா.நல்ல கண்ணு, தனது 101-வது பிறந்தநாளை நேற்று கொண்டாடினார். இதையொட்டி தி.நகர் பாலன் இல்லத்தில் அவரது பிறந்தநாள் விழா, கட்சியின் மாநில செயலாளர் மு.வீரபாண்டியன் தலைமையில் நடைபெற்றது.
இவ்விழாவில் வெளியிடப்பட்ட ஜனசக்தி நூற்றாண்டு சிறப்பு மலர், ஜனசக்தி நாள்காட்டியை, நல்லகண்ணுவின் மூத்த புதல்வி, ஓய்வுபெற்ற தலைமை ஆசிரியர் காசிபாரதி பெற்றுக் கொண்டார்.
முன்னதாக நந்தனத்தில் உள்ள வீட்டில் நல்லகண்ணுவை, சுகாதாரத் துறை அமைச்சர் மா.சுப்பிரமணியன் நேற்று சந்தித்து நலம் விசாரித்து, பிறந்தநாள் வாழ்த்து தெரிவித்தார். இந்நிலையில் முதல்வர் மற்றும் பல்வேறு அரசியல் கட்சிகளின் தலைவர்களும் வெளியிட்ட வாழ்த்து செய்தியில் கூறியிருப்பதாவது:
முதல்வர் மு.க.ஸ்டாலின்: விடுதலைப் போராட்ட வீரராகவும், விவசாயத் தொழிலாளர்களுக்கான போராளியாகவும் திகழ்ந்து, இன்றளவும் நமக்கு வழிகாட்டும் நூற்றாண்டு நாயகர், முதுபெரும் தலைவர் நல்லகண்ணுவுக்கு பிறந்தநாள் வாழ்த்துகள். தன்னலம் கருதா உழைப்புக்கு வாழும் சாட்சியான, எண்ணற்ற இளைஞர்களுக்கு எடுத்துக்காட்டான நல்லகண்ணு, நல்ல உடல்நலத்துடன் நீண்டநாட்கள் நிறைவாழ்வு வாழ்ந்திட விழைகிறேன்.
தமிழக பாஜக தலைவர் நயினார் நாகேந்திரன்: நூற்றாண்டைக் கடந்து ஞானம், நேர்மை, மனிதநேயம் இந்த மூன்றின் அடையாளமாக, பல தலைமுறைகளுக்கு வழிகாட்டியாக திகழும் நல்லகண்ணுவுக்கு பிறந்தநாள் நல்வாழ்த்துகள்.
மதிமுக பொதுச் செயலாளர் வைகோ: இந்திய விடுதலைப் போராட்டம், விவசாயிகள், தொழிலாளர்களுக்கான போராட்டம் என அவர் கண்ட களங்கள் பல. அடக்குமுறைகளுக்கு அஞ்சாமல் இன்றைக்கும் போராடி கொண்டிருக்கும் நல்லகண்ணு நல்ல உடல்நலத்துடன் நீண்டகாலம் வாழ்ந்து தமிழகத்துக்கு வழிகாட்ட வேண்டும்.
விசிக தலைவர் திருமாவளவன்: ஆயிரம் பிறைகண்ட ஆளுமை நல்லகண்ணு. தமிழினத்தின் பெருமைக்கான அடையாளம். அவர் வாழும் காலத்தில் வாழ்கிறோம் என்பதே நமக்கு பெருமை.
மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் மாநில செயலாளர் பெ.சண்முகம்: விடுதலைப் போராட்ட வீரராக தன் இளம் வயதை சிறைச்சாலையில் கழித்து, ஏழை எளிய மக்களுக்காக குரல் கொடுத்து தொடர்ந்து பாடுபட்டு வரும் மூத்த தலைவர் நல்ல கண்ணுவை என்றும் நலமுடன் வாழ வாழ்த்துகிறேன்.
பாமக தலைவர் அன்புமணி: நல்லக்கண்ணு இன்னும் பல்லாண்டு நல்ல உடல்நலத்துடன் வாழ்ந்து அடுத்தடுத்த தலைமுறைகளுக்கு வழிகாட்ட வாழ்த்துகிறேன்.
அமமுக பொதுச்செயலாளர் டிடிவி தினகரன்: இந்திய நாட்டின் விடுதலைக்காக, விவசாயிகளுக்கு ஆதரவாக, தீண்டாமை கொடுமைக்கு எதிராக என தன் வாழ்நாளின் பெரும் பகுதியை சிறையிலேயே கழித்த அப்பழுக்கற்ற அரசியல்வாதி நல்லகண்ணு, நீண்ட ஆயுளோடு மக்கள் பணியைத் தொடர இறைவனை பிரார்த்திக்கிறேன்.
நாம் தமிழர் கட்சி தலைமை ஒருங்கிணைப்பாளர் சீமான்: மக்களின் உயர்வுக்கும், மேம்பாட்டுக்கும் தன் வாழ்வை ஒப்புவித்த இந்நூற்றாண்டின் ஈடுஇணையற்ற மக்கள் போராளி நல்லக்கண்ணுவின் பிறந்த நாளில் அவரைப் போற்றி வணங்குகிறேன். இவ்வாறு அவர்கள் தெரிவித்துள்ளனர்.