சென்னை: ‘சென்னை சூப்பர் 6’ எனும் சென்னைக்கான திமுகவின் தேர்தல் வாக்குறுதிகளை திமுக தலைவரும், முதல்வருமான மு.க.ஸ்டாலின் வெளியிட்டார்.
தமிழக முதல்வர் மு.க.ஸ்டாலின் இன்று (ஏப்ரல் 19), அண்ணா அறிவாலயத்தில், ‘சென்னை சூப்பர்-6’ எனும் வாக்குறுதிகளை வெளியிட, திமுக அமைப்புச் செயலாளர் ஆர்.எஸ்.பாரதி பெற்றுக் கொண்டார்.
அதில் சென்னைக்கான மேம்படுத்தப்பட்ட பொதுவசதிகள், சென்னை முழுவதும் சிறப்பான போக்குவரத்து, திட்டமிட்ட கால அளவில் உட்கட்டமைப்புத் திட்டங்கள், மனிதாபிமானம் - அறிவியல் முறையில் கைவிடப்பட்ட நாய்களின் பிரச்சினைக்கு தீர்வு, உலகளாவிய சிறப்பு மையம், உலகளாவிய திறமைத் தளம் ஆகிய தலைமைப்புகளிலான வாக்குறுதிகளை வெளியிட்டார்.
இந்த அறிவிப்பில் இடம்பெற்றுள்ள முக்கிய அம்சங்கள், ‘
மேம்படுத்தப்பட்ட பொது வசதிகள்:
நகர்ப்புற வாழ்விட மேம்பாட்டு வாரிய அடுக்குமாடிக் குடியிருப்புகளில் குடியிருப்போர் நல மகளிர் சங்கம் மூலம் அரசு நிதியுதவியுடன் பொது வசதிகள் மேம்படுத்தப்படும்.
மெட்ரோ குடிநீர் இணைப்பு இல்லாத பகுதிகளுக்கு ஆர்ஓ சுத்திகரிக்கப்பட்ட குடிநீர் வசதிகள் மற்றும் மெட்ரோ குடிநீர் வசதி உள்ள குடியிருப்புகளுக்கு காலமுறைப்படி குடிநீர் விநியோகம் செய்யப்படும்.
அனைத்து குடியிருப்புப் பகுதிகளிலும் அதி ஒளி தெருவிளக்குகள் அமைக்கப்படும்.
கலை, இசை, இலக்கிய நிகழ்வுகளுக்கென ஒரு தனித்துவ உலகத்தரப் பண்பாட்டு மையம் அமைக்கபடும்.
சென்னை முழுவதும் சிறப்பான போக்குவரத்து:
பேருந்து நிறுத்தங்கள், மெட்ரோ நிலையங்கள் மற்றும் ரயில் நிலையங்களுடன் ஒவ்வொரு தெருவையும் இணைக்கும் வகையில் 1,000 புதிய மினி பேருந்துகள் இயக்கப்படும்.
போக்குவரத்து நெரிசலைக் குறைத்து, பயண நேரத்தை 25% வரை சேமிக்க செயற்கை நுண்ணறிவு (AI) மூலம் இயங்கும் போக்குவரத்து மேலாண்மை நடைமுறைப்படுத்தப்படும்.
திட்டமிட்ட கால அளவில் உட்கட்டமைப்புத் திட்டங்கள்:
எண்ணூர் முதல் பூஞ்சேரி வரையிலான சென்னை எல்லைச் சாலை திட்டம் போன்ற 10க்கும் மேற்பட்ட முக்கிய திட்டங்கள் 2027க்குள் முடிக்கப்படும்.
மெட்ரோ விரிவாக்கப் பணிகள் 2028க்குள் முடிக்கப்படும்.
மழைநீர் வடிகால்கள் 2028க்குள் முடிக்கப்படும்.
பாதாளச் சாக்கடைத் திட்டம் 2027க்குள் முடிக்கப்படும்.
அழகான சாலைகள், அகலமான நடைபாதைகள், நிழல் தரும் மரங்கள், அனைவரும் பயன்படுத்தக்கூடிய கழிப்பறை வசதிகள் என உலகத் தரத்தில் எழில்மிகு சாலை வசதிகள் 2029க்குள் அமைக்கப்படும்.
மனிதாபிமானம், அறிவியல் முறையில் கைவிடப்பட்ட நாய்களின் பிரச்சனைக்குத் தீர்வு:
விலங்குகள் பிறப்புக்கட்டுப்பாட்டு (ABC) திட்டத்தின் கீழ், கால்நடை மருத்துவர்கள் மற்றும் நாய் பிடிப்பவர்களின் எண்ணிக்கை மூன்று மடங்கு அதிகரிக்கப்படும்.
தன்னார்வத் தொண்டு நிறுவனங்களுடன் (NGOs) இணைந்து விரிவுபடுத்தப்பட்ட காப்பகங்கள் உருவாக்கப்படும்.
உலகளாவிய சிறப்பு மையம்:
Al, Animation, Visual Effects, Gaming, and Immersive Technologies க்கான சிறப்பு மையம்
ரூ.10 ஆயிரம் கோடி முதலீடு
20,000 உயர் ஊதிய வேலைவாய்ப்புகள்
உலகளாவிய திறமைத் தளம் (Global Talent Gateway):
உலகத்தரம் வாய்ந்த உட்கட்டமைப்பு
உயர்தரத் திறன் மேம்பாட்டுப் பயிற்சி
ஆராய்ச்சி மையம்
அதிக வருமானம் ஈட்டக்கூடிய வேலைவாய்ப்புகள்’ ஆகிய வாக்குறுதிகள் அளிக்கப்பட்டுள்ளன.