சென்னை: மின்சார ரயில்களில் படிக்கட்டில் தொங்குதல், சாகச பயணத்தில் ஈடுபடுவோர் மீது ரயில்வே சட்டத்தின்கீழ் கடும் நடவடிக்கை எடுக்கப்படும் என்று சென்னை ரயில்வே கோட்ட அதிகாரிகள் எச்சரித்துள்ளனர்.
சென்னையில் சென்ட்ரல் - அரக்கோணம், கடற்கரை - தாம்பரம், செங்கல்பட்டு, வேளச்சேரி உள்பட பல்வேறு வழித்தடங்களில் நாள்தோறும் 650 மின்சார ரயில் சேவைகள் இயக்கப்படுகின்றன. 8 லட்சத்துக்கும் மேற்பட்டோர் பயணம் செய்கின்றனர்.
இந்த நிலையில், பள்ளி, கல்லூரி மாணவர்கள், இளைஞர்கள் சிலர் மிக ஆபத்தான வகையில் மின்சார ரயிலின் படிக்கட்டுகள் மற்றும் ஜன்னல் ஓரத்தில் தொங்கியபடி செல்கின்றனர். இதனால், தவறி விழுந்தும், ரயில் பாதையை ஒட்டியுள்ள கம்பங்களில் மோதியும் படுகாயம் அடைகின்றனர். உயிரிழப்பும் நேரிடுகிறது.
இதை தடுக்க, ஆர்பிஎஃப் போலீஸார் தீவிர கண்காணிப்பில் ஈடுபடும்போதிலும், இளைஞர்கள் சாகசப் பயணம் மேற்கொள்வது தொடர்கிறது. இந்நிலையில், மின்சார ரயில்களில் ஆபத்தான வகையில் சாகசம் செய்வோர் மீது ரயில்வே சட்டத்தின்கீழ் கடும் நடவடிக்கை எடுக்கப்படும் என்று சென்னை ரயில்வே கோட்ட அதிகாரிகள் எச்சரித்துள்ளனர்.
இதுகுறித்து அவர்கள் கூறியதாவது: சென்னை புறநகர் மற்றும் பறக்கும் வழித்தட ரயில் சேவைகளில், இளைஞர்கள், மாணவர்கள் சிலர் பாதுகாப்பற்ற முறையில் பயணம் செய்யும் போக்கு அதிகரித்து வருவது ரயில்வேயின் கவனத்துக்கு வந்துள்ளது.
சமீபகாலமாக, ஓடும் ரயில்களில் தொங்கியபடி நடைமேடையில் சறுக்குவது (skating-style stunts), ரயிலில் இருந்து குதித்து சாகசம் செய்வது, படிக்கட்டுகளில் தொங்கியபடி பயணிப்பது, பொதுமக்களுக்கு இடையூறு விளைவிப்பது மற்றும் இவற்றை வலைதளங்களில் பதிவேற்றம் செய்வதற்காக மொபைலில் வீடியோ பதிவு செய்வது போன்ற சம்பவங்கள் அதிகமாக பதிவாகின்றன.
இந்த செயல்கள் சம்பந்தப்பட்ட தனிநபர்கள் மட்டுமின்றி, சக பயணிகளின் உயிருக்கு ஆபத்தை விளைவிக்கும். இத்தகைய பொறுப்பற்ற செயல்பாடுகள் மாணவர்களின் எதிர்காலத்தை பாதிப்பதுடன், அவர்களது கல்வி நிறுவனங்களுக்கு அவப்பெயரையும், பெற்றோருக்கு மிகுந்த கவலையையும் ஏற்படுத்துகின்றன.
இதை கருத்தில் கொண்டு, பயணிகளின் பாதுகாப்பை உறுதி செய்ய, கண்காணிப்பு நடவடிக்கைகள் தீவிரப்படுத்தப்பட்டுள்ளன. படிக்கட்டு பயணம், சாகசங்கள் அல்லது பாதுகாப்பற்ற செயல்களில் ஈடுபடுவோர் மீது ரயில்வே சட்டத்தின்கீழ் பாரபட்சமின்றி கடும் நடவடிக்கை எடுக்கப்படும்.
எனவே, உயிருக்கு ஆபத்தான சாகசங்களை தவிர்த்து அனைவரும் பாதுகாப்பான பயணத்தை மேற்கொள்ள வேண்டும். பாதுகாப்பு தொடர்பான உதவிகளுக்கு, ரயில்வே உதவி எண் ‘139’-ஐ தொடர்பு கொள்ளலாம் என்றனர்.