சென்னை: சமூகநீதியை உயிர்க் கொள்கையாக மதித்தவர் வி.பி.சிங் என அவரது நினைவு தினத்தில் முதல்வர் மு.க.ஸ்டாலின் மற்றும் அரசியல் கட்சி தலைவர்கள் புகழஞ்சலி செலுத்தியுள்ளனர். மறைந்த முன்னாள் பிரதமர் வி.பி.சிங்கின் நினைவுதினம் நேற்று அனுசரிக்கப்பட்டது.
இதையொட்டி தலைவர்கள் விடுத்த செய்தி: முதல்வர் மு.க.ஸ்டாலின்: பதவிகளை துச்சமாக நினைத்து, சமூகநீதியை உயிர்க் கொள்கையாக மதித்தவர் வி.பி.சிங். பொருளாதாரத்தில் பின் தங்கியவர்கள், நீட் என விதவிதமான வழிகளில் சமூகநீதியை குழிதோண்டிப் புதைக்கும் ஆட்சியாளர்கள் ஒன்றியத்தில் இருக்கும்போது வி.பி.சிங் போன்ற பிரதமரை இன்னும் கூடுதலாகவே மிஸ் செய்கிறோம்.
துணை முதல்வர் உதயநிதி ஸ்டாலின்: மண்டல் கமிஷன் அறிக்கையை நடைமுறைப்படுத்தி கோடானு கோடி பிற்படுத்தப்பட்ட மக்களின் வாழ்வில் இட ஒதுக்கீட்டின் மூலம் ஒளியேற்றியவர் சமூகநீதிக் காவலர் வி.பி.சிங். தமிழகத்தையும், தமிழ் மக்களையும் மனதார நேசித்தவர். சென்னையில் ஆளுயர சிலை வைத்து வி.பி.சிங்-க்கு நம் முதல்வர் மு.க.ஸ்டாலின் பெருமை சேர்த்தார்.
பாமக நிறுவனர் ராமதாஸ்: முன்னாள் பிரதமர் வி.பி.சிங், மண்டல் கமிஷன் பரிந்துரைகளை அமல்படுத்தியதன் மூலம்சமூகநீதிக்கு ஆற்றிய பங்களிப்பு வரலாற்றுச் சிறப்புமிக்கது.
தமிழகத்தில் பிற்படுத்தப்பட்ட வகுப்பினர் மற்றும் மிகப் பிற்படுத்தப்பட்ட வகுப்பினருக்காக இட ஒதுக்கீடு வேண்டி தொடர்ந்து போராட்டங்கள் நடத்திட எனக்கு ஆக்கமும் ஊக்கமும் அளித்து பாராட்டுகளை தெரிவித்தவர் வி.பி.சிங். சமூக நீதிக்காக அவர் ஆற்றிய பணி என்றும் மறக்க முடியாதது.
பாமக தலைவர் அன்புமணி: சமூகநீதியில் வி.பி.சிங் கொண்டிருந்த அக்கறையை அனைவர் மத்தியிலும் கொண்டு சென்று பரப்ப உறுதியேற்கிறேன். அவரது துணையுடன் தமிழகத்தில் சாதிவாரி சர்வே, அதனடிப்படையில் அனைத்து சமூகங்களுக்கும் முழுமையான இட ஒதுக்கீடு ஆகியவற்றை வென்றெடுக்க வி.பி.சிங் நினைவு நாளில் உறுதியேற்போம்.