செந்தில் பாலாஜி, அவரது தம்பி அசோக்குமார் இருவரும் விசாரணைக்கு ஆஜராகுமாறு கரூர் ராமேஸ்வரப்பட்டியில் உள்ள வீட்டில் அவர்களது தந்தையிடம் சம்மன் வழங்கிய திருவல்லிக்கேணி உதவி ஆய்வாளர். படம்: க.ராதாகிருஷ்ணன்
சென்னை/ கரூர்: தவெக எம்எல்ஏவிடம் பேரம் பேசிய விவகாரத்தில் முன்னாள் அமைச்சர் செந்தில் பாலாஜி, அவரது தம்பி அசோக்குமார் ஆகிய இருவரும் நாளை விசாரணைக்கு ஆஜராகுமாறு சென்னை திருவல்லிக்கேணி போலீஸார் சம்மன் அனுப்பியுள்ளனர். அவர்கள் வெளிநாடு தப்பிச் செல்வதை தடுக்க ‘லுக்-அவுட்’ நோட்டீஸும் பிறப்பிக்கப்பட்டுள்ளது.
தவெக ஆட்சியைக் கவிழ்க்கும் நோக்கில் அக்கட்சி எம்எல்ஏக்களிடம் சிலர் பேரத்தில் ஈடுபட முயன்ற விவகாரம் தமிழக அரசியலில் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. இதுதொடர்பாக ஊத்தங்கரை எம்எல்ஏ இளையராஜா அளித்த புகாரின்பேரில் திருவல்லிக்கேணி போலீஸார் வழக்கு பதிவு செய்தனர்.
சென்னையைச் சேர்ந்த ‘ஐடிபிஎஸ்’ நிறுவனத்தின் நிறுவனர் தலைவர் திருநாவுக்கரசு,தியாகராஜன், செல்வன், சீனிவாசன், ராஜேஷ், திருச்சி நரேஷ், கரூரைச் சேர்ந்த கார்த்திக், ரமேஷ் ஆகிய 8 பேர் கைது செய்யப்பட்டுள்ளனர்.
இதுகுறித்து போலீஸ் தரப்பில் கூறப்படுவதாவது: தவெக எம்எல்ஏவிடம் பேரம் பேசுவதற்காக ஒரு கார்ப்பரேட் கம்பெனி முதல்கட்டமாக ரூ.180 கோடி வரை ஒதுக்கியது என கைதானவர்கள் வாக்குமூலம் அளித்துள்ளனர். இதற்கான ஏற்பாடுகள் அனைத்தும் சென்னை கிண்டியில் உள்ள நட்சத்திர ஓட்டலில் நடந்திருப்பது விசாரணையில் தெரியவந்தது. எந்தெந்த எம்எல்ஏக்களிடம் பேரம் பேசுவது என முதலில் பட்டியல் தயாரித்துள்ளனர். அதன்படி, சென்னையில் உள்ள ஒரு எம்எல்ஏ உட்பட பல எம்எல்ஏக்களிடமும் கைதானவர்கள் பேரம் பேசியுள்ளனர்.
சுமார் ஒரு வாரம் அந்த ஓட்டலில் திட்டம் போட்டு, எம்எல்ஏக்களை அழைத்துப் பேச முயற்சி செய்த நிலையில், இந்த விவகாரம் வெளியே கசிந்ததால் அனைவரும் ஓட்டலை பாதியிலேயே காலி செய்துவிட்டுசென்றுள்ளனர். சம்பந்தப்பட்ட கார்ப்பரேட் நிறுவனத்தை காவல் துறை கண்டறிந்துள்ளது.
அதன் நிர்வாகிகளிடம் விசாரணை நடத்தப்பட உள்ளது. இந்த வழக்கில் இதுவரை 8 பேர் கைது செய்யப்பட்டுள்ள நிலையில், மேலும் சிலரை குறிப்பாக, செந்தில் பாலாஜியின் சகோதரர் அசோக்குமாரை போலீஸார் தீவிரமாக தேடி வருகின்றனர். இவ்வாறு போலீஸ் தரப்பில் கூறப்படுகிறது.
இந்நிலையில், பேரம் விவகாரம் தொடர்பாக சென்னை திருவல்லிக்கேணி காவல் நிலையத்தில் நாளை (ஜூலை 6) காலை 10.30 மணிக்கு விசாரணைக்கு ஆஜராகுமாறு செந்தில் பாலாஜி மற்றும் அவரது தம்பி அசோக்குமார் ஆகிய இருவருக்கும் திருவல்லிக்கேணி போலீஸார் சம்மன் அளித்துள்ளனர். கரூர் மாவட்டம் ராமேஸ்வரப்பட்டி கிராமத்தில் உள்ள அவர்களது பூர்வீக வீட்டுக்கு திருவல்லிக்கேணி காவல் நிலைய உதவி ஆய்வாளர் சீனிவாசன் நேற்று சென்று, அவர்களது தந்தை வேலுசாமியிடம் சம்மனை அளித்தார்.
‘லுக்-அவுட்’ நோட்டீஸ்: போலீஸார் தேடி வரும் நிலையில், இருவரும் தலைமறைவாக உள்ளதாக கூறப்படுகிறது. முன்ஜாமீன் கோரி அசோக்குமார் சென்னை உயர் நீதிமன்றத்தில் மனு தாக்கல் செய்துள்ளார். இந்நிலையில், இருவருக்கும் திருவல்லிக்கேணி போலீஸார் ‘லுக்-அவுட்’ நோட்டீஸ் வழங்கியுள்ளனர்.
நெடுஞ்சாலைத் துறை முறைகேடு வழக்கில் திமுக முன்னாள் அமைச்சர் எ.வ.வேலு கடந்த 3-ம் தேதி விசாரணைக்கு ஆஜராகுமாறு லஞ்ச ஒழிப்பு போலீஸார் சம்மன் அனுப்பினர். மருத்துவ சிகிச்சைக்காக ஜூன் 26-ம் தேதியே சிங்கப்பூர் சென்றுவிட்டதாக அவரது வழக்கறிஞர்கள் கூறினர். இதுபோல, செந்தில் பாலாஜி, அவரது தம்பி வெளிநாடு சென்றுவிடாமல் தடுக்க ‘லுக்-அவுட்’ நோட்டீஸ் பிறப்பித்துள்ளதாக கூறப்படுகிறது.