தமிழகம்

டாஸ்மாக் விவகாரம்: ஊழல் வழக்கில் கைதாகி அனுதாபம் தேட முயல்வதா? - ஐகோர்ட் காட்டம்

ஆர்.பாலசரவணக்குமார்

சென்னை: ‘ஊழல் வழக்கில் கைதான நிலையில் அனுதாபம் தேட முயற்சிப்பதா?’ என டாஸ்மாக் வழக்கில் மூலனூர் கார்த்திக் ஜாமீன் கோரிய மனுவை விசாரித்த சென்னை உயர் நீதிமன்றம் காட்டமாக கேள்வி எழுப்பியுள்ளது.

டாஸ்மாக் நிறுவனத்துக்கு மதுபானங்கள் கொள்முதல் செய்தது, பார் உரிமங்கள் வழங்கியது, மதுபானங்களை கடைகளுக்குக் கொண்டுச் செல்ல போக்குவரத்து ஒப்பந்தப் புள்ளி வழங்கியதில் முறைகேடுகள் நடந்துள்ளதாக, திமுக முன்னாள் அமைச்சர் செந்தில் பாலாஜி உள்ளிட்ட 7 பேர் மீது லஞ்ச ஒழிப்புத் துறை போலீஸார் வழக்குப் பதிவு செய்தனர்.

இந்த வழக்கில் கைது செய்யப்பட்டுள்ள கார்த்திக் என்பவர் ஜாமீன் கோரி இரண்டாவது முறையாக சென்னை உயர் நீதிமன்றத்தில் மனு தாக்கல் செய்தார்.

இந்த வழக்கு நீதிபதி வி.லட்சுமி நாராயணன் முன் இன்று விசாரணைக்கு வந்தது. அப்போது, மனுதாரர் தரப்பில், “மனுதாரரை ஏற்கெனவே 4 நாள்கள் காவலில் எடுத்து போலீஸார் விசாரணை நடத்தினர். ஆனால், எதுவும் பறிமுதல் செய்யவில்லை. எனவே ஜாமீன் வழங்க வேண்டும்” என வாதிடப்பட்டது.

அப்போது குறுக்கிட்ட நீதிபதி, “பேரம் பேசி எம்எல்ஏ-வை விலைக்கு வாங்க முயற்சித்த வழக்கில் மனுதாரர் சிறையில் இருந்து வருகிறார். ஊழல் வழக்கில் கைதான நிலையில் அனுதாபம் தேட முயற்சிப்பதா?” என கேள்வி எழுப்பினார்.

இதையடுத்து, இந்த மனுவுக்கு பதிலளிக்க கால அவகாசம் வேண்டும் என காவல் துறை தரப்பில் கேட்கப்பட்டது.

இதனை ஏற்றுக்கொண்ட நீதிபதி, காவல் துறை தரப்பில் பதிலளிக்க உத்தரவிட்டு விசாரணையை செப்.25-ம் தேதிக்கு ஒத்திவைத்து உத்தரவிட்டார்.

முன்னதாக கார்த்திக் ஜாமீன் கோரி தாக்கல் செய்த மனுவை நீதிபதி வி.லட்சுமிநாராயணன் கடந்த ஆக.28-ம் தேதி தள்ளுபடி செய்து உத்தரவிட்டிருந்தது குறிப்பிடத்தக்கது.

SCROLL FOR NEXT