சென்னை: தேர்தலையொட்டி வாக்காளர்களுக்கு விழிப்புணர்வு ஏற்படுத்தும் வகையில், சென்னையில் 3 ஆயிரம் ஆட்டோக்களில் மாநகராட்சி சார்பில் விழிப்புணர்வு ஸ்டிக்கர்கள் ஒட்டப்பட்டுள்ளன.
தமிழக சட்டப்பேரவைத் தேர்தல் வரும் ஏப். 23-ம் தேதி நடைபெற உள்ளது. இதை முன்னிட்டு, சென்னை மாவட்டத்தில் உள்ள 16 சட்டப்பேரவை தொகுதிகளிலும் 100 சதவீத வாக்குப்பதிவை உறுதி செய்யும் நோக்கத்துடன், வாக்காளர்களுக்கு விழிப்புணர்வு ஏற்படுத்தும் வகையில் சிலம்பம், பொய்க்கால் குதிரையாட்டம், புலியாட்டம், பொம்மலாட்டம், மல்லர் கம்பம் மற்றும் பறை இசை போன்ற கலை நிகழ்ச்சிகள் சென்னை முழுவதும் நடத்தப்பட்டு வருகின்றன.
அதேபோல், இளைய தலைமுறையைக் கவரும் வகையில் கானா பாடல்கள், டிஜே இசை மற்றும் பொது இடங்களில் `ஃபிளாஷ் மாப்' எனப்படும் திடீர் நடனக் குழுக்களின் கலை நிகழ்ச்சிகளும் மாநகராட்சி சார்பில் அரங்கேற்றப்படுகின்றன.
இதன் தொடர்ச்சியாக, பொதுமக்களிடையே நேரடி விழிப்புணர்வை ஏற்படுத்தும் வகையில் 3 ஆயிரம் ஆட்டோக்களில் தேர்தல் விழிப்புணர்வு விளம்பரங்கள் ஒட்டும் பணி, நேற்று தொடங்கியது.
இதையொட்டி, கண்ணப்பர் திடல் விளையாட்டு மைதானத்தில் நடைபெற்ற நிகழ்ச்சியில், ஆட்டோக்களின் பின்புறம் `போடுவோம் ஓட்டு, வாங்க மாட்டோம் நோட்டு' மற்றும் `தேர்தல் நாள்: 23 ஏப்ரல் 2026' ஆகிய வாசகங்கள் அடங்கிய விழிப்புணர்வு ஸ்டிக்கர்கள் ஒட்டப்பட்டன.
மேலும், நிகழ்ச்சியில் பங்கேற்ற ஆட்டோ ஓட்டுநர்கள் அனைவரும், வாக்களிப்பதன் அவசியத்தை வலியுறுத்தும் வகையில் தங்களது இடது ஆள்காட்டி விரலை உயர்த்தி விழிப்புணர்வு ஏற்படுத்தினர். இந்த ஆட்டோக்கள் சென்னை மாவட்டத்துக்கு உட்பட்ட 16 சட்டப்பேரவை தொகுதிகளுக்கும் சென்று, விழிப்புணர்வை ஏற்படுத்த உள்ளன.