சென்னை விமான நிலையத்தில் துர்நாற்றம் வீசுவதாக காங்கிரஸ் மூத்த தலைவர் ப.சிதம்பரம் எம்பி குற்றம் சாட்டிய நிலையில், விமான நிலையத்தை ஊழியர்கள் சுத்தமாக பராமரித்து வருகிறார்கள் என, விமான நிலைய அதிகாரிகள் விளக்கம் அளித்தனர்.
டெல்லியில் இருந்து ஏர் இந்தியா விமானத்தில் நேற்று சென்னை வந்த காங்கிரஸ் எம்.பி. ப.சிதம்பரம், சென்னை உள்நாட்டு முனையம் டெர்மினல் 4 வழியாக வெளியில் வந்து காரில் ஏறி வீட்டுக்கு புறப்பட்டார். முன்னதாக, டெர்மினல் 4 பகுதிகளில் கடுமையான துர்நாற்றம் வீசிக்கொண்டு இருந்ததை பார்த்த சிதம்பரம் சமூக வலைதளப் பதிவில், சென்னை சர்வதேச விமான நிலையத்தின் டெர்மினல் 4 சுகாதார சீர்கேடுகளுடன், துர்நாற்றம் வீசிக்கொண்டு இருக்கிறது.
ஒரு சர்வதேச விமான நிலையம், இந்த நிலையில் இருக்கலாமா? இது சென்னை விமான நிலைய மேலாளர்கள், இந்திய விமான நிலைய ஆணைய அதிகாரிகள், மற்றும் விமான நிலைய ஊழியர்கள் கவனத்துக்கு செல்லவில்லையா? இந்த துர்நாற்றத்தை அவர்கள் எப்படி சகித்துக் கொண்டு இருக்கின்றனர் என்று தெரிவித்திருந்தார்.
இதனை தொடர்ந்து, சென்னை விமான நிலைய அதிகாரிகள், அதே வலைதள பக்கத்தில் சிதம்பரத்துக்கு அளித்துள்ள பதிலில், உங்களுக்கு ஏற்பட்டுள்ள அசவுகரியத்துக்கு வருந்துகிறோம். விமான நிலையத்தில் குப்பைகளால் பயணிகளுக்கு பாதிப்புகள் ஏற்படக்கூடாது என்பதற்காக, பயணிகள் நடமாட்டம் அதிகமாக இல்லாத நேரம் பார்த்து, குப்பைகளை சுத்தப்படுத்தி எடுத்து செல்ல ஏற்பாடுகள் செய்திருக்கிறோம்.
காலையில் வழக்கம் போல் குப்பைகளை ஏற்றி கொண்டு வண்டி சென்ற, அடுத்த 10 நிமிடங்களில் நீங்கள் அந்த பகுதிக்கு வந்துள்ளீர்கள். அதனால்தான் உங்களுக்கு, துர்நாற்றம் ஏற்பட்டு இருக்கிறது. விமான நிலையத்தை ஊழியர்கள் சுத்தமாக பராமரித்து வருகிறார்கள். பணியில் இருக்கும், விமான நிலைய மேலாளர்கள், விமான நிலையத்தின் சுத்தம் சுகாதாரத்தை 24 மணி நேரமும் தொடர்ந்து கண்காணித்து வருகின்றனர் என்று தெரிவித்துள்ளனர்.