செங்கல்பட்டு மார்க்கெட் பகுதியில் வியாபாரிகளிடம் வாக்கு சேகரிக்கும் அதிமுக வேட்பாளர் கஜேந்திரன்.
செங்கல்பட்டு: செங்கல்பட்டு சட்டப்பேரவை தொகுதி அந்த மாவட்டத்தின் தலைநகர் தொகுதியாக விளங்குகிறது. கடந்த தேர்தலைப் போலவே தற்போதும் எம்.கஜா என்ற கஜேந்திரனுக்கு வாய்ப்பு வழங்கியுள்ளது அதிமுக. கடந்த முறைபோல அல்லாமல், இந்த முறை வெற்றி பெற்றுவிட வேண்டும் என்ற நோக்கில் தீவிரமாக களப்பணி ஆற்றி வருகிறார் கஜேந்திரன்.
அதிமுகவின் பொதுவான வாக்குறுதிகளைக் கூறுவதோடு, ‘‘கட்சிக்கு வெற்றியைத் தேடித் தரும் நிர்வாகிகளுக்கு தங்க மோதிரம், ராயல் என்ஃபீல்ட் பைக் வழங்குவேன். பொதுச் செயலாளர் பழனிசாமி கையாலேயே அதை வழங்க ஏற்பாடு செய்வேன்’’ என்றும் அறிவித்து, நிர்வாகிகள், தொண்டர்களை உற்சாகப்படுத்தி, வாக்குகளை சேகரித்து வருகிறார்.
செங்கல்பட்டு தொகுதி வளர்ச்சிக்கான தனது 5 ஆண்டு செயல் திட்டங்கள் குறித்து அவர் கூறியதாவது: கூடுவாஞ்சேரி, மறைமலை நகர், செங்கல்பட்டு நகராட்சிகள் தரம் உயர்த்தப்பட்டு, குடிநீர், சாலை, மழைநீர் கால்வாய், கழிவு மற்றும் குப்பை மேலாண்மை போன்ற அடிப்படை வசதிகளுக்கு முன்னுரிமை வழங்கப்படும். இந்த நகராட்சிகளில் விரைவாகவும், தரமான முறையிலும் பாதாள சாக்கடை திட்டம் நிறைவேற்றப்படும்.
பரனூர் சுங்கச் சாவடியை மாற்று இடத்தில் அமைத்து, வாகன நெரிசலைக் குறைக்க நடவடிக்கை எடுக்கப்படும். செங்கல்பட்டு முழுவதும் தண்ணீர்ப் பிரச்சினையைப் போக்கும் வகையில், பாலாற்றில் 5 கி.மீ.க்கு ஒரு இடத்தில் தடுப்பணை கட்ட நடவடிக்கை எடுக்கப்படும். செங்கல்பட்டின் அடையாளமான கொளவாய் ஏரியில் ஆக்கிரமிப்புகள் அகற்றப்பட்டு, ஏரியை தூர்வாரி, சுற்றுலாத் தலமாக மேம்படுத்தப்படும். படகு சவாரி ஏற்பாடு செய்யப்படும்.
செங்கல்பட்டு அரசு மருத்துவமனையில் சூப்பர் ஸ்பெஷாலிட்டி வசதிகள், நவீன பரிசோதனைக் கருவிகள் அமைக்கப்பட்டு, ஆம்புலன்ஸ் சேவைகள் மேம்படுத்தப்படும். அரசின் சேவை மக்களுக்கு எளிதாக கிடைக்க வழிவகை செய்யப்படும். கிராமப் பகுதிகளில் மினி கிளினிக் திட்டம் மூலம் மருத்துவமனைகள் திறக்கப்படும்.
இது மட்டுமின்றி, தாம்பரத்தில் இருந்து செங்கல்பட்டு வரை பறக்கும் மேம்பால வசதி, கிளாம்பாக்கம் பேருந்து நிலையத்துக்கு மெட்ரோ ரயில் வசதி, செங்கல்பட்டு வரை மெட்ரோ ரயில் திட்டம் விரிவாக்கம், பட்டா இல்லாத குடும்பங்களுக்கு வீட்டுமனை பட்டா, அரசுப் பள்ளிகள், ஆரம்ப சுகாதார நிலையங்கள் மேம்பாடு, கோயம்பேடுபோல செங்கல்பட்டிலும் காய்கறி மார்க்கெட் வசதி, அறிவுசார் மையங்களில் ஐஏஎஸ், ஐபிஎஸ் தேர்வுக்கு இலவசப் பயிற்சி, மழைக் காலங்களில் குடியிருப்புகளை மழைநீர் தேங்காமல் இருக்கவடிகால் வசதி, இளைஞர்களுக்கு புதிய வேலைவாய்ப்புகள் ஆகிய திட்டங்களையும் செயல்படுத்துவேன்.
இதுதவிர, நான் பிரச்சாரம் மேற்கொண்ட இடங்களில் எல்லாம் பொதுமக்கள் பல்வேறு குறைகளைத் தெரிவித்தனர். அவற்றை கண்டிப்பாக நிவர்த்தி செய்வேன். அதிமுக அளித்த தேர்தல் வாக்குறுதிகள் தொகுதியில் அனைவருக்கும் கிடைக்க ஏற்பாடு செய்வேன். இவ்வாறு அவர் கூறினார்.
மக்களின் முக்கிய கோரிக்கை பாலாற்றில் தடுப்பணை கட்டி, கடலில் தண்ணீர் வீணாக கலப்பதை தடுக்க வேண்டும். தாம்பரத்தில் இருந்து செங்கல்பட்டு வரை உயர்மட்ட மேம்பாலம் கட்ட வேண்டும்.
போக்குவரத்து நெரிசலைக் கட்டுப்படுத்த வேண்டும். நீர்நிலைகளை பாதுகாக்க வேண்டும். மருத்துவக் கட்டமைப்புகளை மேம்படுத்த வேண்டும், தடுப்பு மருந்து தொழிற்சாலை தொடங்க நடவடிக்கை எடுக்க வேண்டும்.
செங்கல்பட்டு அரசு மருத்துவமனையில் அனைத்து வசதிகளையும் நிறைவேற்றி, மருத்துவர், செவிலியர் பற்றாக்குறையைப் போக்க வேண்டும் என்பதை பிரதான கோரிக்கைகளாக முன்வைத்துள்ளனர் செங்கல்பட்டு தொகுதி மக்கள்.