சென்னை: “மக்கள் வழங்கிய புதிய மாற்றத்தை ஜீரணிக்க முடியாமல், சொந்தக் கட்சியின் இரட்டை வேடத்தை மறைத்துவிட்டுப் பிறர் மீது பழிபோடும் திமுகவின் மலிவான அரசியல் நாடகம் இனியும் எடுபடாது” என தமிழக காங்கிரஸ் பொருளாளர் ரூபி மனோகரன் தெரிவித்தார்.
இதுகுறித்து அவர் வெளியிட்ட அறிக்கையில், “மக்களின் தீர்ப்பை ஏற்றுக்கொள்ள முடியாமல் விரக்தியின் உச்சத்தில் நின்று பிதற்றிக் கொண்டிருக்கும் திமுகவும் அதன் செய்தித் தொடர்பாளர்களும் முதலில் தங்களின் கடந்த காலக் கொள்கை விளக்கக் குறிப்புகளைத் திறந்து பார்க்க வேண்டும்.
திமுகவின் முன்னாள் சட்டப்பேரவை உறுப்பினர் இ.பரந்தாமன் பேசுவதற்கு முன்பு கொஞ்சம் ஆதாரங்களை எடுத்து உண்மையை சரிபார்த்துவிட்டு வாருங்கள். 2022-2023, 2023-2024, 2024-2025 ஆகிய முந்தைய திமுக ஆட்சிக் காலங்களில் அமைச்சர் ராஜகண்ணப்பன் தாக்கல் செய்த அதிகாரப்பூர்வ கொள்கை விளக்கக் குறிப்புகளில் நேரு மற்றும் அம்பேத்கர் பெயர்கள் எங்குமே இடம்பெறவில்லை என்பதுதான் நிதர்சனமான உண்மை.
அந்த காலகட்டத்தில் நீங்களும் சட்டப்பேரவை உறுப்பினராகத்தானே இருந்தீர்கள்?. அப்போதெல்லாம் உங்கள் துறை அமைச்சர் சட்டப்பேரவையில் கொள்கை விளக்கக் குறிப்பைப் படிக்கும்போது அவையிலேயே தூங்கிக் கொண்டு இருந்தீர்களா?. ஆட்சி அதிகாரத்தில் இருந்த பல வருடங்களாக அம்பேத்கர் பெயரையும், நேருவின் பெயரையும் கொள்கை விளக்கக் குறிப்பில் சேர்க்காமல் திட்டமிட்டுப் புறக்கணித்தீர்களா?. அப்போது எங்கே போனது உங்கள் சமூக நீதி?.
அன்று நீங்களே சமூக நீதி வரலாற்றையே இருட்டடிப்பு செய்து, சமூக நீதியின் வேர்களையே வெட்டத் துணிந்துவிட்டு, இப்போது வந்து வெட்கம், மானம், ரோஷம் என்று பேசுகிறீர்களே... அதே கேள்வியை நான் இப்போது உங்களிடம் திருப்பிக் கேட்கிறேன். இன்று இதையெல்லாம் பற்றிப் பேசும் உங்களுக்கு வெட்கம், மானம், ரோஷம், சொரணை எதுவும் துளியாவது இருக்கிறதா?.
2026 தேர்தல் நேரத்தில் மட்டும் திடீரென அரசியல் லாபத்திற்காகவும் கூட்டணிக் கணக்குகளுக்காகவும் மெய்யநாதன் மூலமாக பெயர்களைச் சேர்த்த உங்கள் கபட நாடகத்தை மக்கள் அறியாதவர்களா?. இந்த முறை திமுகவில் உங்களுக்கு எம்எல்ஏ சீட் கூட கிடைக்காத விரக்தியா?
சத்தியமூர்த்தி பவனைப் பற்றிக் குறை பேசவும், பெயர் மாற்றச் சொல்லவும் உங்களுக்கு என்ன தகுதி இருக்கிறது?. அன்று நேருவையும் அம்பேத்கரையும் வசதியாக மறந்துவிட்டு, இன்று தேர்தல் தோல்வி பயத்தில் மட்டும் அவர்களைக் கையில் எடுக்கும் உங்கள் ‘அறிவாலயத்தின்’ பெயரை என்னவென்று மாற்றப் போகிறீர்கள் என்று முதலில் சொல்லுங்கள்.
மக்கள் வழங்கிய புதிய மாற்றத்தை ஜீரணிக்க முடியாமல், சொந்தக் கட்சியின் இரட்டை வேடத்தை மறைத்துவிட்டுப் பிறர் மீது பழிபோடும் இந்த மலிவான அரசியல் நாடகம் இனியும் எடுபடாது” எனத் தெரிவித்துள்ளார்.