

சென்னை: சட்டப்பேரவையில் நேற்று முன்தினம் சோழவந்தான் தவெக எம்எல்ஏ கருப்பையா, இளைஞர்களை சீரழிக்கும் ஜல்லிக்கட்டு என்று பேசியது சர்ச்சைக்குள்ளாகியுள்ளது. இதற்கு அதிமுக, அமமுக உள்பட பல்வேறு கட்சி தலைவர்கள் கண்டனம் தெரிவித்துள்ளனர்.
இது குறித்து, சமூக வலை தளப் பக்கத்தில் அதிமுக வெளியிட்ட பதிவு: தமிழரின் பாரம்பரியமான ஜல்லிக்கட்டு விளையாட்டைப்பற்றி சட்டப்பேரவையில் ஆளும் கட்சி தவெக சட்டப்பேரவை உறுப்பினர் கருப்பையா இழிவாகப் பேசியிருப்பது கடும் கண்டனத்துக்குரியது. ஜல்லிக்கட்டுக்கு உலகப்புகழ் பெற்ற அலங்காநல்லூரை தனது தொகுதியில் வைத்துள்ள ஒரு சட்டப்பேரவை உறுப்பினர் இப்படி பேசியிருப்பது மிகுந்த அதிர்ச்சியையும், பல சந்தேகங்களையும் ஏற்படுத்துகிறது.
சங்க காலம் தொட்டே தமிழர்களுக்கும் மாடுகளுக்குமான உறவைப் பறைசாற்றும் இந்த ஏறு தழுவுதல் பற்றி புரிதல் இல்லாமலா இந்த தொகுதியின் சட்டப்பேரவை உறுப்பினர் இருப்பார்? மாணவர்கள், இளைஞர்கள் தன்னெழுச்சியாக திரண்டு நடத்திய வரலாற்றுப்புரட்சி விளைவாக, அன்றைய அதிமுக அரசு, மத்திய அரசிடம் வலியுறுத்திப் பெற்ற உரிமையை, மிகவும் கீழ்த்தரமாக பேசியுள்ள சட்டப்பேரவை உறுப்பினரின் இந்த பேச்சு ஏன் அவைக்குறிப்பில் இருந்து நீக்கப்படவில்லை?
ஜல்லிக்கட்டுக்கு தடை கொண்டு வரவேண்டும் என இன்றைய பொய்க்கால் குதிரை அரசு நினைத்து, அதற்கான முதல் பார்வையாக தனது எம்எல்ஏ-வை பேச வைத்துள்ளாரா முதல்வர் என்ற சந்தேகம் தமிழக மக்களுக்கு எழுகிறது. தனது எம்எல்ஏ பேசிய பேச்சுக்கு முதல்வர் மன்னிப்பு கேட்க வேண்டும். ஜல்லிக்கட்டு குறித்த இந்த அரசின் நிலைப்பாட்டை அறிவிக்க வேண்டும். இவ்வாறு அதில் தெரிவிக்கப்பட்டுள்ளது.
அம்மா மக்கள் முன்னேற்றக் கழக பொதுச்செயலாளர் டிடிவி தினகரன்: வீர விளையாட்டான ஜல்லிக்கட்டு போட்டிகள் இளைஞர் சமுதாயத்தைச் சீரழிக்கின்றன என்ற சோழவந்தான் சட்டப்பேரவை உறுப்பினர் கருப்பையாவின் பேச்சு கடும் கண்டனத்துக்குரியது.
சட்டப்பேரவை உறுப்பினர்களைத் தக்கவைத்துக் கொள்ள மக்கள் வரிப் பணத்திலிருந்தே கார் வழங்கலாம் என்று முடிவெடுத்த தவெக, அதனை தனது 2 சட்டப்பேரவை உறுப்பினர்களை வைத்தே எப்படி அவையில் முன் மொழிந்ததோ அதேபோல ஜல்லிக்கட்டு விளையாட்டுக்கு உலக அளவில் புகழ்பெற்ற அலங்காநல்லூரை உள்ளடக்கிய சோழவந்தான் தொகுதியின்சட்டப்பேரவை உறுப்பினரை வைத்தே இத்தகைய இழிவான பேச்சைச் சட்டப்பேரவையில் பதிவு செய்திருப்பதன் மூலம், வருங்காலத்தில் ஜல்லிக்கட்டு போட்டிகளுக்குத் தடை விதிக்க தவெக அரசு முயல்கிறதா?
ஐஜேகே தலைவர் ரவிபச்சமுத்து: ஜல்லிக்கட்டு என்பதுதமிழர்களின் தொன்மையான பண்பாட்டோடும், கிராமிய வாழ்வியலோடும் பின்னிப் பிணைந்த ஒரு பாரம்பரிய நிகழ்வாகும். தமிழர்களின் உணர்வுகளைப் புரிந்துகொண்டு, கருத்துகளை பொறுப்புடனும், நிதானத்துடனும் தெரிவிக்க வேண்டியது மக்கள் பிரதிநிதிகளின் கடமை.
கருப்பையா விளக்கம்: இதுகுறித்து, கருப்பையா எம்எல்ஏ அளித்துள்ள விளக்கத்தில், ‘‘இளைஞர் சமுதாயத்தை நல்வழிப்படுத்த வேண்டும், ஒரு கூண்டுக்குள் அடைக்கக்கூடாது என்ற நல்லெண்ணத்துடன் தான் கூறினேனே தவிர, தவறான உள்நோக்கம் கிடையாது” என்று தெரிவித்துள்ளார்.