மாசி வீதிகளில் தேர்கள் சென்ற பின் குப்பையை உடனுக்குடன் அகற்றிய தூய்மைப் பணியாளர்கள்.

 

படம்: எஸ்.கிருஷ்ணமூர்த்தி

தமிழகம்

மதுரை சித்திரை திருவிழாவில் குப்பை தேங்காமல் சுகாதாரமாக நடந்த தேரோட்டம்!

மாநகராட்சி நிர்வாகத்துக்கு குவியும் பாராட்டு

ஒய்.ஆண்டனி செல்வராஜ்

மதுரை: மதுரை சித்திரைத் திருவிழாவில் கடந்த ஆண்டைப்போல், மாநகராட்சி ஆணையர் சித்ராவின் ஏற்பாட்டில் 350 தூய்மைப் பணியாளர்கள் குழுவினர் தேருக்கு முன்னும், பின்னும் சென்று குப்பையை உடனுக்குடன் அகற்றி அப்புறப் படுத்தினர்.

இதனால் குப்பையில்லாமல் சுகாதாரமான தேர்த் திருவிழாவை வெற்றிகரமாக நடத்திக் காட்டிய மாநகராட்சி நிர்வாகத்துக்கு பாராட்டுகள் குவிந்து வருகின்றன. மதுரை மீனாட்சி அம்மன் கோயில் சித்திரைத் திருவிழா, கடந்த 10 நாட்களாக நடந்து வருகிறது.

இந்த விழாவின் முக்கிய நிகழ்ச்சியான தேரோட்ட விழா, நேற்று காலை மாசி வீதிகளில் கோலாகலமாக நடந்தது. கீழமாசி வீதியில் உள்ள தேரடியில் இருந்து காலை 6.30 மணிக்கு தேர் புறப்பட்டது. பக்தர்கள், பூக்கள், மாலைகளை தூக்கி வீசி ஆர்ப்பரித்தனர்.

தேருக்கு பின்னால் ஊர்வலமாக வந்த பக்தர்களுக்கு, பல்வேறு தன்னார்வ அமைப்புகள், இந்து அமைப் புகள், தனியார் நிறுவனங்கள் வழிநெடுக அன்னதானம், பழங்கள், தண்ணீர் பாட்டில்கள், குளிர்பானங்கள், மோர் போன்ற வற்றை வழங்கினர்.

சிலர் பிளாஸ்டிக் விசிறிகளையும், தொப்பிகளையும் வழங்கினர். அன்னதானம் வழங்கியவர்கள் புளியோதரை, எலுமிச்சை, தயிர் சாதம், வெஜிடபிள் பிரியாணி போன்றவற்றை தட்டுகளில் வைத்து தேரோட்டம் தொடங்கி யது முதல் முடியும் வரை வழங்கினர்.

அதனால், தேர்கள் சென்ற பின்பு மாசி வீதிகளில் பூக்கள், உணவுக்கழிவு, தட்டுகள், தண்ணீர் பாட்டில்கள், பக்தர்கள் அணிந்திருந்த செருப் புகள் போன்றவை சிதறிக் கிடந்தன. அவற்றை, ஆணையர் சித்ரா ஏற்பாட்டில் நகர்நலப் பிரிவு உதவி அலுவலர் அபிஷேக் தலைமையில் 200 மாநகராட்சி தூய்மைப் பணியாளர்கள், 150 தற்காலிக பணியாளர்கள் குழுவினர், தேருக்கு முன்பும் பின்பும் சென்று தூய்மைப்பணியில் ஈடுபட்டனர்.

தேர் செல்வதற்கு முன் குப்பையில்லாமல் பார்த்துக் கொள்வதும், தேர் சென்ற பின்னர் குவிந்த குப்பையை உடனுக்குடன் அகற்றுவதுமாக தேர்த்திருவிழாவை சுகாதார மான விழாவாக மாநகராட்சி நிர்வாகம் வெற்றிகரமாக நடத்தி முடித்துள்ளது.

தேர் கடந்து சென்றவுடன் தூய்மை பணி நடந்து குப்பையின்றி பளிச்சிடும் மாசி வீதிகள்.

கடந்த காலங்களில், தேரோட்டத்தின்போது குவியும் குப்பையை மறுநாள் காலை யில்தான் மாநகராட்சி அகற்றும். அதுவரை குப்பை தேங்கி சுகாதார சீர்கேடாக காணப்படும்.

கடந்த 2024-ம் ஆண்டு பிப்ரவரி மாதம் மாநகராட்சி ஆணையராக சித்ரா பொறுப்பேற்ற பிறகு நடந்த சித்திரைத் திருவிழாவில் குப்பை தேங்காமல் உடனுக்குடன் அகற்ற முக்கியத்துவம் கொடுக்கப்பட்டது.

மாநகராட்சி யின் இந்த தூய்மைப் பணிக்கு கடந்த ஆண்டே மக்களிடம் பாராட்டுகள் கிடைத்தன. அதேபோல், இந்த ஆண்டும் குப்பையில்லா தேர்த் திருவிழா முடிந்துள்ளது.

இதற்கு காரண மான ஆணையர் சித்ராவுக்கும், களத்தில் நின்று சவாலுடன் பணியாற்றிய நகர்நலப் பிரிவு உதவி அலுவலர் அபிஷேக், சுகாதார ஆய்வாளர் ரமேஷ், தூய்மைப் பணியாளர்களுக்கு பாராட்டுகள் குவிந்து வருகின்றன.

இதுகுறித்து நகர்நலப் பிரிவு உதவி அலுவலர் அபிஷேக் கூறுகையில், தேர்த்திருவிழாவில் 350 பணி யாளர்கள் அப்புறப்படுத்திய குப்பையை 25 டிராக்டர்கள் மூலம் எல்லீஸ் நகருக்கு கொண்டு சென்று, அங்கிருந்து லாரிகள் மூலம் வெள்ளக்கல் கொண்டு செல்லப்பட்டது. தேர் நிலையை அடைந்தவுடன் மாசி வீதிகள் அனைத்தும் தூய்மையாகின. மொத்தம் 100 டன் குப்பையை அகற்றி உள்ளோம் என்றார்.

SCROLL FOR NEXT