படம்: ம.பிரபு
சென்னை: தமிழகத்தில் நாளை முதல் ஆகஸ்ட் 2-ம் தேதி வரை ஓரிரு இடங்களில் மழை பெய்ய வாய்ப்புள்ளது.
இது தொடர்பாக சென்னை வானிலை ஆய்வு மையம் வெளியிட்ட செய்தி்குறிப்பில் கூறியிருப்பதாவது: தமிழக கடலோரப் பகுதிகளில் கீழ்மட்ட வளிமண்டலத்தில் ஒரு பலவீனமான காற்றழுத்தத் தாழ்வுப் பாதை நிலவுகிறது. இதன் காரணமாக தமிழகத்தில் நாளை (ஜூலை 28) முதல் 31-ம் தேதி வரை மேற்கு தொடர்ச்சி மலை மாவட்டங்களில் ஓரிரு இடங்களில் இடி, மின்னல் மற்றும் பலத்த காற்றுடன் கூடிய மிதமான மழை பெய்யக்கூடும். இதர தமிழகத்தில் ஓரிரு இடங்களில் லேசான மழை பெய்யக்கூடும்.
ஆக.1-ம் தேதி உள் மற்றும் வட தமிழக கடலோர பகுதிகளில் ஓரிரு இடங்களில் மிதமான மழையும், இதர தமிழகத்தில் ஓரிரு இடங்களில் லேசான முதல் மிதமான மழை பெய்யக்கூடும். ஆகஸ்ட் 2-ம் தேதி மேற்கு தொடர்ச்சி மலை மாவட்டங்கள், வட தமிழக கடலோர பகுதிகளில் ஓரிரு இடங்களில் மிதமான மழையும், இதர தமிழகத்தில் ஓரிரு இடங்களில் லேசான மழையும் பெய்யக்கூடும்.
தமிழகத்தில் 30-ம் தேதி நீலகிரி மாவட்டத்திலும், ஜூலை 31 மற்றும் ஆகஸ்ட் 1-ம் தேதிகளில் கோவை, நீலகிரி மற்றும் தேனி மாவட்டங்களில் ஓரிரு இடங்களில் கனமழை பெய்யக்கூடும். தமிழகத்தில் நாளை முதல் 30-ம் தேதி வரை அதிகபட்ச வெப்பநிலை ஒருசில இடங்களில் வழக்கத்தை விட 7 டிகிரி ஃபாரன்ஹீட் வரை உயரக்கூடும். சென்னை மற்றும் புறநகர் பகுதிகளில் நாளை வானம் ஓரளவு மேகமூட்டத்துடன் காணப்படும்.
நகரின் ஒருசில பகுதிகளில் இடி, மின்னலுடன் கூடிய லேசான மழை பெய்ய வாய்ப்புள்ளது. அதிகபட்ச வெப்பநிலை 103 டிகிரி, குறைந்தபட்ச வெப்பநிலை 86 டிகிரி ஃபாரன்ஹீட் அளவை ஒட்டி இருக்கக்கூடும்.
தமிழகத்தில் இன்று காலை 8.30 மணியுடன் நிறைவடைந்த 24 மணி நேரத்தில் பதிவான மழை அளவுகளின்படி அதிகபட்சமாக புதுக்கோட்டையில் 3 செமீ, கோவை உபாசி, புதுக்கோட்டை மாவட்டம் திருமயத்தில் தலா 2 செமீ, கடலூர் மாவட்டம், விருதாச்சலம், குடிதாங்கி, குப்பநத்தம், கோவை மாவட்டம் சோலையார், திருச்சி மாவட்டம் துவாக்குடியில் தலா 1 செமீ மழை மழை பதிவாகியுள்ளது. இவ்வாறு செய்திக்குறிப்பில் கூறப்பட்டுள்ளது.