சென்னை: கடலூர் உள்ளிட்ட 7 மாவட்டங்களில் இன்று (ஜன. 12) கனமழை பெய்ய வாய்ப்புள்ளதாக சென்னை வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.
இதுதொடர்பாக சென்னை மண்டல வானிலை ஆய்வு மையம் வெளியிட்ட செய்திக்குறிப்பில் கூறியிருப்பதாவது: தென்மேற்கு வங்கக்கடல் பகுதிகளில் நிலவிய காற்றழுத்த தாழ்வு மண்டலம், வடகிழக்கு இலங்கை கடலோரப் பகுதிகளில் முல்லைத்தீவுக்கு அருகில் நேற்று முன்தினம் மாலை காற்றழுத்த தாழ்வு மண்டலமாக கரையைக் கடந்தது.
இது படிப்படியாக வலு குறைந்து, தென் கடலோர தமிழகம் மற்றும் அதையொட்டிய மன்னார் வளைகுடா பகுதிகளின் மேல் வளிமண்டல கீழடுக்கு சுழற்சியாக நிலவுகிறது. இதன் காரணமாக தமிழகத்தில் இன்று சில இடங்களிலும், நாளை தென் தமிழகத்தில் சில இடங்களிலும், வட தமிழகத்தில் ஓரிரு இடங்களிலும், வரும் 14-ம் தேதி தமிழகத்தில் ஓரிரு இடங்களிலும், 15 முதல் 17-ம் தேதி வரை தமிழகத்தில் பெரும்பாலான இடங்களிலும் வறண்ட வானிலையும் நிலவக்கூடும்.
தமிழகத்தில் இன்று கடலூர், அரியலூர், தஞ்சாவூர், திருவாரூர், நாகப்பட்டினம், மயிலாடுதுறை, புதுக்கோட்டை மாவட்டங்களிலும், காரைக்கால் பகுதியிலும் ஓரிரு இடங்களில் கனமழை பெய்ய வாய்ப்புள்ளது.
சென்னை மற்றும் புறநகர் பகுதிகளில் இன்று வானம் பொதுவாக மேகமூட்டத்துடன் காணப்படும். நகரின் சில பகுதிகளில் லேசானது முதல் மிதமான மழை பெய்யக்கூடும்.
தமிழக கடலோரப் பகுதிகள், மன்னார் வளைகுடா மற்றும் குமரிக்கடல் பகுதிகளில் இன்று மணிக்கு 35 முதல் 45 கி.மீ. வேகத்திலும், இடையிடையே 55 கி.மீ. வேகத்திலும் சூறாவளிக்காற்று வீசக்கூடும். எனவே, இப்பகுதிகளுக்கு மீனவர்கள் செல்ல வேண்டாம்.
தமிழகத்தில் நேற்று காலை 8.30 மணியுடன் நிறைவடைந்த 24 மணி நேரத்தில் பதிவான மழை அளவுகளின்படி அதிகபட்சமாக நாகப்பட்டினம் மாவட்டம் வேளாங்கண்ணியில் 9 செ.மீ., திருப்பூண்டியில் 6 செ.மீ., வேதாரண்யம், திருநெல்வேலி மாவட்டம் ஊத்தில் 5 செ.மீ., நாலுமுக்கு, காக்காச்சி, தஞ்சாவூர் மாவட்டம் பேராவூரணி, புதுக்கோட்டை மாவட்டம் நாகுடி, நாகப்பட்டினம் மாவட்டம் கோடியக்கரை,
தலைஞாயிறு ஆகிய இடங்களில் 4 செ.மீ. மழை பதிவாகியுள்ளது. இவ்வாறு செய்திக்குறிப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.