இடம்: சென்னை மெரினா கடற்கை
படம்: வேளாங்கண்ணி ராஜ்
சென்னை: தமிழகத்தின் முக்கிய இடங்களில் பாதுகாப்பை பலப்படுத்த மத்திய உளவுத் துறை போலீஸார் எச்சரிக்கை விடுத்துள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது.
தமிழகத்தில் தவெக தலைவர் விஜய் இன்னும் ஆட்சி அமைக்காத நிலையில், சட்டம் - ஒழுங்கு பிரச்சினை ஏற்பட வாய்ப்புள்ளதாக உளவுத் துறை சுட்டிக்காட்டி, இந்த அறிவுறுத்தலை வழங்கி உள்ளதாக காவல் துறை அதிகாரிகள் தெரிவித்தனர்.
தமிழக சட்டப்பேரவைத் தேர்தலில் விஜய் தலைமையிலான தவெக 108 இடங்களை கைப்பற்றி தனிப்பெரும் கட்சியாக உருவெடுத்துள்ளது. ஆனாலும் ஆட்சி அமைக்க குறைந்தது 118 எம்எல்ஏக்கள் தேவை என்பதால் பெரும்பான்மையைப் பெற முடியாத நிலையில் தவெக உள்ளது. எந்தக் கட்சிக்கும் தனிப் பெரும்பான்மை கிடைக்காததால், கூட்டணி ஆட்சி அமைப்பதில் தவெக மும்முரம் காட்டி வருகிறது.
சுயேச்சை வேட்பாளர்கள் யாரும் இல்லாத நிலையில், 5 எம்எல்ஏக்களை வைத்துள்ள காங்கிரஸ் உடன் தவெக கைகோத்துள்ளது. இதனால் தவெகவின் பலம் 113 ஆக உயர்ந்துள்ளது. தற்போது விசிக மற்றும் கம்யூனிஸ்ட்டுகளின் ஆதரவை தவெக கேட்டுள்ளது. ஆதரவு அளிப்பது தொடர்பாக கம்யூனிஸ்ட்கள், விசிக ஆலோசித்து வருகின்றன.
அதிமுக எம்எல்ஏக்கள் அனைவரும் புதுச்சேரியில் முகாமிட்டுள்ளனர். திமுகவும் தனியாக எம்எல்ஏ கூட்டத்தை நடத்துகிறது. இதனால் தமிழக அரசியல் களம் பரபரப்பாக காணப்படுகிறது.
இந்நிலையில், ஆளுநருக்கு எதிர்ப்பு தெரிவித்தும், விஜய்க்கு முதல்வராக பதவிப் பிரமாணம் செய்து வைக்க வலியுறுத்தியும் மெரினா கடற்கரையில் தவெகவினர் திரள உள்ளதாக சமூக வலைதளங்களில் தகவல் பரவியது. இதையடுத்து போலீஸார் அந்தப் பகுதிகளில் அதிகளவில் நிறுத்தப்பட்டு, கண்காணிப்பை பலப்படுத்தியுள்ளனர்.