சென்னை: ஆம்ஸ்ட்ராங் கொலை வழக்கில் தகவல்களை திரட்டும் நோக்கத்தில் அவரது மனையியிடம் சிபிஐ அதிகாரிகள் நேற்று 2 மணி நேரம் விசாரணை நடத்தினர்.
பகுஜன் சமாஜ் கட்சியின் முன்னாள் தமிழக தலைவர் ஆம்ஸ்ட்ராங், கடந்த 2024-ம் ஆண்டு ஜூலை 5-ம் தேதி சென்னை பெரம்பூரில் உள்ள அவரது வீட்டுக்கு அருகில் வெட்டி படுகொலை செய்யப்பட்டார்.
இந்த வழக்கில் சென்னை செம்பியம் போலீஸார் விசாரணை நடத்தி, பலரை கைது செய்து குற்றப்பத்திரிகையும் தாக்கல் செய்திருந்தனர்.
எனினும், வழக்கின் பின்னணியில் உள்ள சதித்திட்டம் குறித்து முழுமையான விசாரணை நடத்தப்படவில்லை என ஆம்ஸ்ட்ராங்கின் மனைவி பொற்கொடி உள்ளிட்டோர் கோரிக்கை விடுத்தனர்.
இதையடுத்து, சென்னை உயர் நீதிமன்ற உத்தரவின்பேரில் வழக்கு சிபிஐ விசாரணைக்கு அண்மையில் மாற்றப்பட்டது. கடந்த 6-ம் தேதி சிபிஐ புதிய வழக்கை பதிவு செய்து விசாரணையை தொடங்கியது.
இந்நிலையில், ஆம்ஸ்ட்ராங்கின் மனைவி பொற்கொடியிடம் சிபிஐ அதிகாரிகள் நேற்று சுமார் 2 மணி நேரம், அவரது வீட்டில் விசாரணை நடத்தினர். வழக்கு தொடர்பாக அவரிடம் முக்கிய தகவல்கள் மற்றும் ஆவணங்கள் குறித்து அதிகாரிகள் கேட்டறிந்ததாக கூறப்படுகிறது.
மேலும், கொலைக்கான பின்னணி மற்றும் சதித்திட்டம் தொடர்பாகவும் விசாரணை தீவிரப்படுத்தப்பட்டுள்ளது. ஆம்ஸ்ட்ராங் கொலை நடந்த இடத்திலும் சிபிஐ அதிகாரிகள் நேரில் ஆய்வு செய்துள்ளனர் என்பது குறிப்பிடத்தக்கது.