சென்னை: தமிழகத்தில் நேற்று (ஏப்.21) மாலையுடன் தேர்தல் பிரச்சாரம் முடிவடைந்த நிலையில், இதுவரை ரூ.1,262 கோடி மதிப்பில் பணம், பரிசுப் பொருட்கள் உள்ளிட்டவை பறிமுதல் செய்யப்பட்டுள்ளதாக தலைமை தேர்தல் அதிகாரி அர்ச்சனா பட்நாயக் தெரிவித்துள்ளார். இதில் ரொக்கப் பணம் மட்டும் ரூ.543 கோடி என்பது குறிப்பிடத்தக்கது.
மேலும், இதுவரை 4.18 லட்சம் தபால் வாக்குகள் பதிவாகி உள்ளதாகவும் அவர் கூறினார்.
தமிழக சட்டப்பேரவைத் தேர்தல் நாளை (ஏப்.23) ஒரே கட்டமாக நடைபெற உள்ள நிலையில், தேர்தலை ஒட்டி மேற்கொள்ளப்பட்டுள்ள ஏற்பாடுகள் தொடர்பாக அர்ச்சனா பட்நாயக் செய்தியாளர்களை சந்தித்தார்.
அப்போது அவர் கூறுகையில், “தமிழகத்தில் தேர்தல் பணியில் உள்ள அரசு ஊழியர்கள் இன்று வரை தபால் ஓட்டுக்களை போட முடியும். இதுவரை 4,18,541 வாக்குகள் போடப்பட்டுள்ளன.
தமிழகத்தில் 33,133 இடங்களில் மொத்தம் 75,064 வாக்குச்சாவடிகள் அமைக்கப்பட்டுள்ளன. இவற்றில் 249 மாதிரி வாக்குச்சாவடி மையங்கள் அமைக்கப்பட்டுள்ளன. பெண் பணியாளர்கள் நடத்தும் வாக்குச்சாவடிகள் 325 ஆக உள்ளது, இளைஞர்கள் மட்டுமே நடத்தும் வாக்குச்சாவடிகள் 79 ஆக உள்ளது. 5,949 வாக்குச்சாடிகள் பதற்றமானவை என கண்டறியப்பட்டுள்ளன.
தமிழக சட்டப்பேரவைத் தேர்தலுக்காக 1,06,418 வாக்குச்சாவடி இயந்திரங்கள் கையிருப்பில் உள்ளன. இதேபோல், 75,064 கட்டுப்பாட்டு கருவிகளும், 75,064 விவி பேட் கருவிகளும் கையிருப்பில் உள்ளன. தேர்தல் பணிக்கு போதிய அளவு இயந்திரங்கள் கையிருப்பில் உள்ளன. வாக்குச்சாவடி இயந்திரங்கள் மற்றம் கன்ட்ரோல் யூனிட் ஆகியவற்றை பொருத்தவரை 20 சதவீதம் அளவுக்கு கூடுதலாக உள்ளன. விவிபேட் 30 சதவீதம் அளவுக்கு கூடுதலாக கையிருப்பில் உள்ளது.
வாக்குப்பதிவு மையங்களில் 3 லட்சத்து 60 ஆயிரத்து 68 அதிகாரிகள் பணியில் இருப்பார்கள். பாதுகாப்புப் பணிகளில் மொத்தம் 83,875 காவலர்கள் பணியில் ஈடுபடுத்தப்பட்டுள்ளார்கள். கால் சென்டர் (எண் - 1950), மீடியா கண்காணிப்பு, செலவு கண்காணிப்பு, வாக்குப்பதிவு கண்காணிப்பு என மொத்தம் 4 கட்டுப்பாட்டு அறைகள் முழு வீச்சில் செயல்பட்டு வருகின்றன.
தேர்தலை ஒட்டி மேற்கொள்ளப்பட்டு வரும் கண்காணிப்பு பணிகள் காரணமாக இதுவரை ரூ.1,262 கோடி மதிப்பில் தங்கம், மதுபானங்கள், பரிசுப் பொருட்கள், ரொக்கம் பறிமுதல் செய்யப்பட்டுள்ளது. இவற்றில், ரூ.543 கோடி அளவுக்கு ரொக்கமாக பறிமுதல் செய்யப்பட்டுள்ளன.
சமூக ஊடக பதிவுகள் தொடர்பாக 243 விளக்கங்கள் அளிக்கப்பட்டுள்ளன. 163 புகார்கள் மீது முதல் தகவல் அறிக்கை பதிவு செய்யப்பட்டுள்ளது. 2,180 தவறான சமூக ஊடக பதிவுகளின் யுஆர்எல் பிளாக் செய்யப்பட்டுள்ளது. பல்வேறு தரப்புகளில் இருந்து 5,634 புகார்கள் பெற்றப்பட்ட நிலையில், அவற்றில் 17 புகார்கள் நிலுவையில் உள்ளன. அவற்றுக்கு எதிராகவும் நடவடிக்கை எடுக்கப்பட்டு வருகிறது. மே 4ம் தேதி மொத்தம் 62 மையங்களில் வாக்குகள் எண்ணப்பட உள்ளன. இவ்வாறு அவர் தெரிவித்தார்” என்றார்.