சென்னை: தமிழகத்தில் லோக் ஆயுக்தா சட்டத்தை தீவிரமாக அமல்படுத்த நடவடிக்கை எடுக்கக் கோரி தொடரப்பட்ட வழக்கில், தமிழக அரசு 6 வாரத்தில் பதில் அளிக்க உயர் நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.
மத்திய, மாநில அரசு அதிகாரிகள், ஊழியர்கள் மீதான ஊழல் புகார்களை விசாரிக்கும் நோக்கில் லோக்பால், லோக் ஆயுக்தா சட்டத்தை மத்திய அரசு கடந்த 2013-ம் ஆண்டு இயற்றியது. இதன் அடிப்படையில் தமிழகத்தில் தமிழ்நாடு லோக் ஆயுக்தா சட்டம் கடந்த 2018-ம் ஆண்டு இயற்றப்பட்டு, அதே ஆண்டு நவம்பரில் அமலுக்கு வந்தது.
இந்த சட்டத்தை தமிழகத்தில் தீவிரமாக அமல்படுத்த உத்தரவிடக் கோரி தஞ்சாவூரைச் சேர்ந்த வி.ஜீவகுமார் என்பவர் சென்னை உயர் நீதிமன்றத்தில் பொதுநல வழக்கு தொடர்ந்தார். அதில் அவர் கூறியிருந்ததாவது:
தமிழ்நாடு லோக் ஆயுக்தா சட்டம் தமிழகத்தில் இன்னும் தீவிரமாக செயல்படுத்தப்படவில்லை. மேலும், அரசின் துணைச் செயலர் அந்தஸ்தில் உள்ள அதிகாரியை தமிழக லோக் ஆயுக்தா செயலராக நியமிக்க வேண்டும் என்று கூறியுள்ள நிலையில், ஓய்வு பெற்ற அல்லது பணியில் உள்ள மாவட்ட நீதிபதியை நியமிக்கும் வகையில் விதிகளை திருத்தி கடந்த 2020-ல் அரசாணை பிறப்பி்க்கப்பட்டுள்ளது. இது மத்திய அரசின் சட்டத்தை மீறும் செயல் என்பதால், அந்த அரசாணையை ரத்து செய்ய வேண்டும். இவ்வாறு அதில் கோரப்பட்டிருந்தது.
இந்த வழக்கை விசாரித்த தலைமை நீதிபதி எஸ்.ஏ.தர்மாதிகாரி, நீதிபதி ஜி.அருள்முருகன் அமர்வு, 6 வாரத்தில் பதில் அளிக்குமாறு அரசுக்கு உத்தரவிட்டு விசாரணையை தள்ளி வைத்தது.