சென்னை: தமிழக கோயில்களில் பின்பற்றப்படும் சிறப்புக் கட்டண தரிசன முறையை ரத்து செய்ய நடவடிக்கை எடுக்க அறநிலையத் துறைக்கு உத்தரவிடக் கோரி சென்னை உயர் நீதிமன்றத்தில் மனு தாக்கல் செய்யப்பட்டுள்ளது.
விஸ்வ இந்து பரிஷத் வட தமிழ்நாடு பிரிவு தலைவர் பி.சொக்கலிங்கம் தாக்கல் செய்துள்ள இந்த மனுவில், ‘தமிழகத்தில் இந்து சமய அறநிலையத் துறை கட்டுப்பாட்டில் உள்ள கோயில்களில், கூட்ட நெரிசலை கட்டுப்படுத்துவதற்கு என்ற பெயரில், 500 ரூபாய் வரை பணம் வசூலித்து, சிறப்புக் கட்டண தரிசன முறை அமல்படுத்தப்பட்டுள்ளதாகக் குறிப்பிடப்பட்டுள்ளது.
கோயில்களில் பணம் வசூலித்து, சிறப்பு தரிசனம் செய்ய எந்த சட்டப் பிரிவுகளும் அனுமதி வழங்கவில்லை. கடந்த 1967-ம் ஆண்டுக்கு பின் திராவிட கட்சிகள் ஆட்சிக்கு வந்த பின்னர் தான் இந்த நடைமுறை அமலுக்கு வந்துள்ளது.
இந்த கட்டண தரிசன முறை காரணமாக, சாதாரண மக்கள் சாமி தரிசனத்துக்காக காத்திருக்க வேண்டிய நிலை ஏற்பட்டுள்ளது. மூத்த குடிமக்கள், மாற்றுத் திறனாளிகள், கர்ப்பிணி பெண்கள், புதுமண தம்பதிகள், பால்குடம் எடுப்பவர்கள், காவடி எடுப்பவர்கள், மாநில ஆளுநர்கள், முதல்வர்கள், மடாதிபதிகள், ஜீயர்கள், உபயதாரர்கள் உள்ளிட்டோருக்கு இலவச சிறப்பு தரிசனத்துக்கு அனுமதிக்கலாம்.
பணத்தின் அடிப்படையில் பாரபட்சம் காட்டும் இந்த திராவிட தர்மம் அரசியலமைப்பு சட்டத்துக்கு விரோதமானது. கோயில்களில் சிறப்புக் கட்டண தரிசன முறையை ரத்து செய்ய நடவடிக்கை எடுக்கும்படி அறநிலையத் துறைக்கு உத்தரவிட வேண்டும்’ என மனுவில் கோரிக்கை விடுக்கப்பட்டுள்ளது.