ஆவடி: ஆவடி மாநகராட்சி தூய்மை பணியாளர்களுக்கு வழங்கப்பட்ட காலை உணவில் பல்லி விழுந்து கிடந்த விவகாரம் தொடர்பாக தனியார் கேட்டரிங் நிறுவன உரிமையாளர் மீது 4 சட்டப் பிரிவுகளின் கீழ் ஆவடி போலீஸார் வழக்குப் பதிவு செய்துள்ளனர்.
திருவள்ளூர் மாவட்டம், ஆவடி மாநகராட்சியில் பணிபுரிந்து வரும் தூய்மை பணியாளர்களுக்கு தமிழக அரசு சார்பில் நாள்தோறும் காலை உணவு வழங்கப்படுகிறது.
இந்த காலை உணவை, தெலங்கானா மாநிலம், ஐதராபாத்தை தலைமையிடமாக கொண்ட தனியார் கேட்டரிங் நிறுவனம், ஆவடி, சின்னம்மன் கோயில் அருகே சமையல் கூடம் அமைத்து ஒப்பந்த அடிப்படையில் தயாரித்து வழங்குகிறது.
இந்நிலையில் நேற்று முன் தினம் காலையில் வழக்கம்போல் தூய்மை பணியாளர்கள் காலை உணவை அருந்தினர். அப்போது, மண்டலம் 3-க்கு உட்பட்ட பருத்திப்பட்டு பகுதியில் தூய்மை பணியில் ஈடுபட்ட பணியாளர்களுக்கு வழங்கப்பட்ட காலை உணவில், சாம்பாரில் பல்லி இருந்தது. இதனால், 45-க்கும் மேற்பட்டோர் வாந்தி, மயக்கம் ஏற்பட்டு, ஆவடி அரசு மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டனர்.
இதில், வசந்தா, எமிலி, விஜயலட்சுமி, குமார் ஆகியோர் மட்டும் உள் நோயாளிகளாக அனுமதிக்கப்பட்டு சிகிச்சை பெற்று நேற்று வீடு திரும்பினர். மற்றவர்கள் புறநோயாளிகள் பிரிவில் சிகிச்சை பெற்று, நேற்று முன் தினமே வீடு திரும்பினர்.
இதுகுறித்து உணவு பாதுகாப்புத் துறை அதிகாரிகள் தனியார் கேட்டரிங் நிறுவனத்தின் சமையல் கூடத்தில் 16 உணவு மாதிரிகளை சேகரித்து, சோதனைக்காக சென்னை - கிண்டி, திருநெல்வேலி - பாளையங்கோட்டையில் உள்ள ஆய்வகங்களுக்கு அனுப்பியுள்ளனர்.
ஆய்வின் முடிவில், தவறுகள் இருப்பது தெரிய வந்தால் சம்பந்தப்பட்ட தனியார் கேட்டரிங் நிறுவனம் மீது உரிய நடவடிக்கை எடுக்கப்படும் என ஆவடி மாநகராட்சி நிர்வாகம் தெரிவித்துள்ளது.
இதற்கிடையே, பல்லி விழுந்து கிடந்த உணவை அருந்தியதால் பாதிக்கப்பட்ட தூய்மை பணியாளர்களில் ஒருவரான குமார் ஆவடி காவல் நிலையத்தில் நேற்று முன் தினம் மாலை புகார் அளித்தார்.
அதன் பேரில் நடத்திய முதல் கட்ட விசாரணையின் அடிப்படையில் போலீஸார், உணவு பாதுகாப்பு மற்றும் தர நிர்ணயச் சட்டப்பிரிவு 59 உள்ளிட்ட 4 சட்டப்பிரிவுகளின் கீழ், தனியார் கேட்டரிங் நிறுவன உரிமையாளர் ஹரி மீது வழக்குப் பதிவு செய்துள்ளனர்.