திருச்சி: திருச்சி லால்குடி தொகுதியில் சுயேச்சையாக போட்டியிட திரைப்பட நடிகர் மன்சூர் அலிகான் வேட்புமனு தாக்கல் செய்துள்ளார்.
இந்நிலையில், கல்லக்குடி ரயில் நிலையப் பகுதிகளில் நேற்று முன்தினம் வாக்கு சேகரித்த அவர், திடீரென ரயில் நிலையத்துக்குள் சென்று, கல்லக்குடி என்ற பெயர்ப்பலகை முன்பு ரயில் தண்டவாளத்தில் தலை வைத்து படுத்தார். அந்நேரத்தில் அந்த தடத்தில் ரயில் எதுவும் வரவில்லை.
அதைத்தொடர்ந்து செய்தியாளர்களிடம் பேசிய மன்சூர் அலிகான், ‘‘வரலாற்றுச் சிறப்புமிக்க நிகழ்வை நினைவுகூரும் வகையில் மறைந்த முன்னாள் முதல்வர் கருணாநிதி நினைவாக தண்டவாளத்தில் தலைவைத்து படுத்தேன்.
முதல்வர் மு.க.ஸ்டாலின், எதிர்க்கட்சி தலைவர் பழனிசாமி ஆகியோரை சந்தித்து தேர்தலில் போட்டியிட வாய்ப்பு கேட்டேன். இருவரும் தராததால் இங்கு சுயேச்சையாக போட்டியிடுகிறேன் என்றார்.
இந்நிலையில், ரயில் நிலையத்துக்குள் அத்துமீறி நுழைந்ததற்காக திருச்சி ரயில்வே பாதுகாப்புப் படை போலீஸார், நடிகர் மன்சூர் அலிகான் மீது வழக்குப் பதிவு செய்துள்ளனர்.