தமிழகம்

தவெக ஆட்சியை கவிழ்க்க பேரம் பேசிய வழக்கு: கரூரில் நள்ளிரவில் அதிரடி சோதனை

க.ராதாகிருஷ்ணன்

கரூர்: தவெக ஆட்சியை கவிழ்க்க எல்எல்ஏவிற்கு ரூ.25 கோடி வரை பேரம் பேசிய வழக்கில், கரூர் மாநகராட்சிக்கு உட்பட்ட பகுதியில் போலீஸார் நேற்று நள்ளிரவில் அதிரடி சோதனையில் ஈடுபட்டனர்.

தவெக ஆட்சியை கவிழ்க்க எல்எல்ஏவிற்கு ரூ.25 கோடி வரை பேரம் பேசிய வழக்கில் திருவல்லிக்கேணி காவல் நிலையத்தில் வழக்கு பதிவு செய்யப்பட்டு பலரும் கைது செய்யப்பட்டு சிறையில் அடைக்கப்பட்டுள்ளனர்.

கரூர் மாநகராட்சிக்கு உட்பட்ட எல்.ஜி.பி நகரில் வசிக்கும் கனகராஜ் என்பவரது அலுவலகம் பாரி நகரில் உள்ளது. இந்த நிலையில், இவ்வழக்கு தொடர்பாக திருவல்லிக்கேணி காவல் நிலைய விசாரணை அதிகாரியின் உத்தரவின் பெயரில், கரூர் மாவட்டம் லாலாபேட்டை காவல் நிலைய ஆய்வாளர் மணிகண்டன் தலைமையிலான போலீஸார் அந்த அலுவலகத்தில் நேற்று நள்ளிரவில் அதிரடி சோதனையில் ஈடுபட்டனர்.

சுமார் 1 மணி நேர சோதனைக்குப் பிறகு எந்த ஆவணமும், பணமும் இல்லாததால் சிசிடிவியில் பதிவான காட்சிகள் மற்றும் கணக்குப் புத்தகங்களை போலீஸார் பறிமுதல் செய்து எடுத்துச் சென்றதுடன், அந்த அலுவலகத்திற்கு சீல் வைத்துச் சென்றுள்ளனர். மேலும், அங்கே பாதுகாப்பிற்காக 2 பெண் காவலர்கள் நிறுத்தப்பட்டுள்ளனர்.

குதிரை பேர பின்னணி: கிருஷ்ணகிரி மாவட்டம் ஊத்தங்கரை தவெக எம்எல்ஏ இளையராஜாவிடம் குதிரை பேரத்தில் ஈடுபட்டதாக பதிவு செய்யப்பட்ட வழக்கில் நரேஷ், ரமேஷ், கார்த்திக், திருநாவுக்கரசு உட்பட 9 பேரை சென்னை திருவல்லிக்கேணி போலீஸார் கைது செய்துள்ளனர்.

திமுக முன்னாள் அமைச்சர் செந்தில் பாலாஜி, அவரது தம்பி அசோக்குமார் மீதும் இது தொடர்பாக வழக்குப் பதிவு செய்யப்பட்டுள்ளது. அவர்களுக்கு உயர் நீதிமன்றம் நிபந்தனை முன்ஜாமீன் வழங்கியுள்ளது.

இந்நிலையில், தவெக ஆட்சியை கவிழ்க்க எல்எல்ஏவிற்கு ரூ.25 கோடி வரை பேரம் பேசிய வழக்கில், கரூர் மாநகராட்சிக்கு உட்பட்ட பகுதியில் போலீஸார் நேற்று நள்ளிரவில் அதிரடி சோதனையில் ஈடுபட்டனர்.

SCROLL FOR NEXT