தமிழகம்

தலைமைச் செயலர் சாய்குமார் நியமனத்துக்கு எதிரான வழக்கு தள்ளுபடி

ஆர்.பாலசரவணக்குமார்

சென்னை: தமிழக தலைமைச் செயலராக சாய்குமாரை நியமித்து தேர்தல் ஆணையம் பிறப்பித்த உத்தரவை ரத்து செய்யக் கோரி தொடரப்பட்ட வழக்கை தள்ளுபடி செய்து சென்னை உயர் நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.

புதுக்கோட்டை மாவட்டம் அறந்தாங்கியை சேர்ந்த வீராசாமி என்பவர் சென்னை உயர் நீதிமன்றத்தில் தாக்கல் செய்திருந்த மனுவில், ‘தமிழக சட்டப்பேரவைத் தேர்தல் நடத்தை விதிகள் அமலில் இருந்த காலகட்டத்தில் கடந்த ஏப்.8 அன்று தமிழக தலைமைச் செயலராக பதவி வகித்த முருகானந்தத்தை மாற்றிவிட்டு, புதிய தலைமைச் செயலராக சாய்குமாரை நியமித்து தேர்தல் ஆணையம் உத்தரவிட்டுள்ளது.

ஏற்கெனவே முன்னாள் முதல்வர் பழனிசாமியின் செயலராக பணியாற்றிய சாய்குமாரை, தேர்தல் நேரத்தில் தமிழக அரசின் தலைமைச் செயலராக நியமிப்பது என்பது ஏற்புடையதல்ல.

சாய்குமாரின் நடுநிலைமை குறித்த அச்சம் எழுந்துள்ளதால் அவரை மாற்ற வேண்டுமென தேர்தல் ஆணையத்துக்கு மனு அளித்தும் நடவடிக்கை எடுக்கவில்லை. எனவே சாய்குமாரை தலைமைச் செயலராக நியமித்து பிறப்பித்த உத்தரவை ரத்து செய்ய வேண்டும்’ எனக் கோரியிருந்தார்.

இந்த மனுவை விசாரித்த தலைமை நீதிபதி எஸ்.ஏ. தர்மாதிகாரி மற்றும் நீதிபதி ஜி. அருள்முருகன் ஆகியோர் அடங்கிய அமர்வு, இந்த வழக்கு விசாரணைக்கு உகந்தது அல்ல எனக் கூறி தள்ளுபடி செய்து உத்தரவிட்டுள்ளனர்.

SCROLL FOR NEXT