சென்னை: நேர்காணல் இல்லாத பதவிகளை உள்ளடக்கிய ஒருங்கிணைந்த தொழில்நுட்பப் பணிகள் தேர்வில் சான்றிதழ்களை முழுமையாகப் பதிவேற்றம் செய்ய தேர்வர்களுக்கு கால அவகாசம் அளிக்கப்பட்டுள்ளதாக டிஎன்பிஎஸ்சி தெரிவித்துள்ளது.
இது தொடர்பாக டிஎன்பிஎஸ்சி செயலாளர் பானோத் ம்ருகேந்தர் லால் வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பு: கடந்த ஆகஸ்ட் மாதம் நடத்தப்பட்ட ஒருங்கிணைந்த தொழில்நுட்பப் பணிகள் தேர்வில் (நேர்காணல் இல்லாத பதவிகள்) தேர்வர்களால் பதிவேற்றம் செய்யப்பட்ட சான்றிதழ்கள் மற்றும் ஆவணங்கள் சரிபார்க்கப்பட்டன.
அப்போது சில தேர்வர்கள் ஒரு சில சான்றிதழ்களை முழுமையாகவும், சரியாகவும் பதிவேற்றம் செய்யாமல் குறைபாட்டுடன் வைத்திருப்பது கண்டறியப்பட்டது. எனவே, அத்தகைய தேர்வர்கள் விடுபட்ட சான்றிதழ்களை முழுமையாகப் பதிவேற்றம் செய்யவும், குறைகளை சரிசெய்யவும் ஏப்ரல் 6-ம் தேதி வரை இறுதி வாய்ப்பு அளிக்கப்படுகிறது.
அந்த தேர்வர்களின் பதிவெண்கள் அடங்கிய பட்டியல் தேர்வாணையத்தின் இணையதளத்தில் வெளியிடப்பட்டுள்ளது. இது தொடர்பாக அவர்களுக்கு குறுஞ்செய்தி, மின்னஞ்சல் வாயிலாக தகவலும் அனுப்பப்பட்டுள்ளது.
குறிப்பிட்ட காலக்கெடுவுக்குள் சான்றிதழ்களை பதிவேற்றம் செய்யாத தேர்வர்களின் விண்ணப்பம் நிராகரிக்கப்படும். இவ்வாறு அவர் கூறியுள்ளார்.
அவர் வெளியிட்டுள்ள மற்றொரு செய்திக்குறிப்பில், “ஒருங்கிணைந்த தொழில்நுட்பப் பணிகள் தேர்வில் (நேர்முகத் தேர்வு பதவிகள்) இடம்பெற்றுள்ள பதவிகளுக்கான தேர்வுகள் மார்ச் 7 மற்றும் 8-ம் தேதி நடத்தப்பட்டன.
தற்போது கட்டாய தமிழ் மொழி தகுதித்தாள் தேர்வு மற்றும் வேளாண்மை, வணிக நிர்வாகம், எலெக்ட்ரிக்கல் மற்றும் எலெக்ட்ரானிக்ஸ் இன்ஜினீயரிங், நிதி மற்றும் செலவுக் கணக்கு, சட்டம், மெக்கானிக்கல், உற்பத்தி பொறியியல் ஆகிய பாடங்களுக்கான உத்தேச விடைகள் (கீ ஆன்ஸர்) தேர்வாணையத்தின் இணையதளத்தில் (www.tnpsc.gov.in) வெளியிடப்பட்டுள்ளன.
தேர்வர்கள் உத்தேச விடைகள் மீது இணையவழியாக ஏப்ரல் 3-ம் தேதி வரை முறையீடு செய்யலாம். அஞ்சல் வழியாகவும், மின்னஞ்சல் வாயிலாகவும் பெறப்படும் முறையீடுகள் ஏற்றுக்கொள்ளப்பட மாட்டாது” என்று கூறியுள்ளார்.