கண்டோன்மெண்ட் பல்லாவரம் பகுதியில் வாக்குசேகரித்த அமைச்சர் தா.மோ அன்பரசன்.
தேர்தலுக்கு இன்னும் சில நாட்களே உள்ள நிலையில், சுட்டெரிக்கும் வெயிலையும் பொருட்படுத்தாமல் ஆலந்தூர் சட்டப்பேரவைத் தொகுதி வேட்பாளர்கள் தீவிர வாக்கு சேகரிப்பில் ஈடுபட்டு வருகின்றனர்.
ஆலந்தூர் தொகுதியில் திமுக, அதிமுக, நாம் தமிழர் கட்சி, தமிழக வெற்றிக் கழகம், தமிழக வாழ்வுரிமைக் கட்சி, புதிய தமிழகம், அனைத்திந்திய புரட்சித் தலைவர் மக்கள் முன்னேற்றக் கழகம் உள்ளிட்ட கட்சிகள் மற்றும் சுயேச்சைகள் உட்பட 23 வேட்பாளர்கள் களத்தில் உள்ளனர்.
திமுக - அமைச்சர் தா.மோ.அன்பரசன்
தமிழக அமைச்சரும், திமுக வேட்பாளருமான தா.மோ.அன்பரசன், கடந்த 5 ஆண்டு கால திமுக ஆட்சியில் கல்வி, சுகாதாரம், பெண்கள் நலம், விவசாயம், தொழில் வளர்ச்சி உள்ளிட்ட துறைகளில் மேற்கொள்ளப்பட்ட திட்டங்களை எடுத்துரைத்து வாக்கு சேகரித்து வருகிறார்.
தொகுதியில் குடிநீர் உட்பட அடிப்படை பிரச்சினைகள் தீர்த்து வைக்கப்பட்டுள்ளதாகவும் கூறி பிரச்சாரத்தில் ஈடுபட்டு வருகிறார்.
ஆலந்தூர் பகுதியில் வாக்கு சேகரிப்பில் ஈடுபட்ட அதிமுக வேட்பாளர் சரவணன்.
அதிமுக - ச.சரவணன்
அதிமுக வேட்பாளரான ச.சரவணன், தமிழகத்தின் சட்டம்-ஒழுங்கு பிரச்சினைகள், நிறைவேறாத வாக்குறுதிகள் போன்றவற்றை முன்வைத்து பிரச்சாரம் செய்து வருகிறார்.
மேலும், அதிமுக ஆட்சிக்கு வந்தவுடன் தாலிக்குத் தங்கம் திட்டம் மீண்டும் செயல்படுத்தப்படும். வீடில்லா ஏழைகளுக்கு கான்கிரீட் வீடு கட்டித் தரப்படும் என்பன உள்ளிட்ட வாக்குறுதிகளை அளித்து வாக்கு சேகரித்து வருகிறார்.
இளைஞர்களுடன் சென்று வாக்கு சேகரிப் பில் ஈடுபட்ட நாதக வேட்பாளர் மகாலட்சுமி.
நாம் தமிழர் கட்சி - யா.க மகாலட்சுமி
நாதக வேட்பாளரான யா.க.மகாலட்சுமி, தொகுதி முழுவதும் தீவிர வாக்கு சேகரிப்பில் ஈடுபட்டுள்ளார்.
மேலும், கட்சியின் கொள்கைகள் மற்றும் தேர்தல் வாக்குறுதிகளை விளக்கி மாற்று அரசியலை முன்வைத்து வாக்கு சேகரித்து வருகிறார்.
திறந்த ஜீப்பில் சென்று வாக்கு சேகரித்த தவெக வேட்பாளர் ம.ஹரிஷ்.
தமிழக வெற்றிக் கழகம் - ம.ஹரிஷ்
தவெக சார்பில் போட்டியிடும் ம.ஹரிஷ், தேர்தல் வாக்குறுதிகள் அடங்கிய துண்டுப் பிரசுரங்கள் வழங்கி வாக்கு சேகரித்து வருகிறார்.
மேலும், மாற்றம் வேண்டும் என விரும்பும் மக்கள் விஜய்யை ஆதரித்து வருகின்றனர்.
எனவே, நிச்சயம் தமிழக அரசியலில் மாற்றம் நிகழும் என்று கூறி வருகிறார். தேர்தலுக்கு இன்னும் சில தினங்களே உள்ளதால், ஆலந்தூர் தொகுதியில் வேட்பாளர்களின் பிரச்சாரம் அனல் பறக்கிறது.