குஷ்பு | கோப்புப் படம்
புதுச்சேரி: விஜய் மனதில் பாஜக உள்ளதால்தான் புதுச்சேரியில் அவரது வேட்பாளருக்கு பதில் பாஜக வேட்பாளர் பெயரை கூறினார். ராகுல் ஒருகாலத்திலும் பிரதமராக முடியாது என பாஜக துணைத் தலைவர் குஷ்பு தெரிவித்துள்ளார்.
தமிழக பாஜக துணைத் தலைவர் குஷ்பு புதுவையில் தொண்டமாநத்தம் முதல் பத்துக்கண்ணு சந்திப்பு வரை ரோடு ஷோ நடத்தி, தேசிய ஜனநாயக கூட்டணி வேட்பாளர்களை ஆதரித்து பிரச்சாரத்தில் இன்று ஈடுபட்டார்.
இதைத்தொடர்ந்து அவர் செய்தியாளர்களிடம் கூறியதாவது: தமிழகத்தில் ஊழல் ஆட்சி நடக்கிறது. 8,9-ம் வகுப்பு குழந்தைகளிடம் சாராயம், போதைப் பொருட்கள் கிடைக்கிறது. ஆனால் புதுவையில் முன்னேற்றமான ஆட்சி நடக்கிறது. புதுவையில் ரெஸ்டோபார்களுக்கு கட்டுப்பாடுகள் உள்ளது. ஆனால் தமிழகத்தில் பள்ளி மாணவர்கள் மது அருந்திவிட்டு வகுப்பறைகளில் வந்து தகராறில் ஈடுபடுகின்றனர்.
புதுவை ரெஸ்டோபார்களுக்கும், தமிழக சாராயத்துக்கும் வித்தியாசம் உள்ளது. மக்களை ஏமாற்றி, பொய் வாக்குறுதியை அளித்து 5 ஆண்டு திமுக ஆட்சி நடத்தியது. டீசல் விலைக்கு மத்திய அரசு வரி சலுகை அளித்துள்ளது. ஆனால் அதைப்பற்றி பேச தமிழக அரசுக்கு வக்கில்லை. புதுவைக்கு மாநில அந்தஸ்து வழங்குவதாக பொய்யான வாக்குறுதி அளிக்க முடியாது. புதுவைக்கு மாநில அந்தஸ்து வழங்குவது மிகப்பெரிய நடவடிக்கை. இதுகுறித்து பல மாநிலங்களுடன் பேச வேண்டியுள்ளது. தேவையான விஷயத்தை பாஜக சரியான காலத்தில் செய்யும்.
மல்லிகார்ஜூன கார்கே தனது நாற்காலியை காப்பாற்ற பிரதமராகவோ, குடியரசுத் தலைவராகவோ ராகுல் ஆவார் எனச் சொல்வார். ராகுல் பிரதமராவது கனவு. அவர்கள் கனவு காண்பதற்கு உரிமை உண்டு. ஆனால் அவரால் ஒருபோதும் பிரதமர் ஆக முடியாது. புதுவை மதுவை மட்டும் நம்பி இல்லை. புதுவை சுற்றுலா நகரம். இங்கு அளவோடு மது உள்ளது. ஆனால் தமிழகத்தில் மது விற்பனையை மட்டுமே நம்பி அரசு செயல்படுகிறது.
தமிழகத்தில் சட்டம் ஒழுங்கு சீர்குலைந்துள்ளது. தமிழகத்துக்கு ரூ.10 லட்சம் கோடி கடன் உள்ளது. சாலை உட்பட அடிப்படை வசதிகள் இல்லை. தமிழகத்தில் துப்புரவு பணியாளர்கள், ஆசிரியர்கள் தொடர் போராட்டம் நடத்தினர். இளைஞர்களை போதைக்கு அடிமையாக்கி வைத்துள்ளனர். தமிழகம், புதுவையில் நிச்சயம் தேசிய ஜனநாயக கூட்டணி வெற்றி பெறும்.
விஜய் நேற்றுதான் அரசியலுக்கு வந்துள்ளார். அவரை விட்டுவிடுங்கள், அவரைப்பற்றி பேச வேண்டாம். அவர் மனதில் பாஜக உள்ளதால்தான் புதுவை பிரச்சாரத்தின்போது அவர் கட்சி வேட்பாளருக்கு பதிலாக பாஜக வேட்பாளர் பெயரை கூறியுள்ளார். பிரதமர் மோடி வருகையால்தான் திமுக வலுப்பெறுகிறது என்று ஸ்டாலின் குறிப்பிட்டார். அப்போதும் ஸ்டாலினுக்கு பாஜகதான் தேவைப்படுகிறது,” என்றார்.