ராமேசுவரம்: தலைமன்னார் - தனுஷ்கோடி இடையேயான பாக் நீரிணை கடல் பகுதியை 10 மணி 45 நிமிடங்களில் நீந்தி கடந்து பெங்களூருவை சேர்ந்த தம்பதி சாதனை படைத்தனர்.
கர்நாடக மாநிலம் பெங்களூருவைச் சேர்ந்த தானிஸ் அப்டி (30), அவரது மனைவி விஷாலி பிரசித் (30). இருவரும் தகவல் தொழில்நுட்ப பொறியாளர்களாக பணிபுரிகின்றனர். பெங்களூரு அகாடமியில் நீச்சல் பயிற்சி பெற்று பல போட்டி களில் வெற்றி பெற்றுள்ளனர்.
இருவரும் இலங்கையில் உள்ள தலைமன்னாரில் இருந்து இந்தியாவில் உள்ள தனுஷ்கோடி வரையிலான பாக் நீரிணை கடல் பகுதியை நீந்தி கடப்பதற்காக இந்திய வெளியுறவுத்துறை, இலங்கை தூதரகம் மற்றும் பாதுகாப்புத்துறை அமைச்சகத்திடம் அனுமதி பெற்றனர்.
இதையடுத்து, ராமேசுவரம் மீன்பிடித் துறைமுகத்தில் இருந்து 2 விசைப்படகுகளில் பயிற்சியாளர், மருத்துவர், மீனவர்கள் உள்ளிட்ட 20 பேர் கொண்ட குழுவினருடன் தலைமன்னாருக்கு புறப்பட்டுச் சென்றனர்.
தலைமன்னாரில் கடந்த புதன்கிழமை அதிகாலை 4.30 மணிக்கு நீந்த தொடங்கிய தானிஸ் அப்டி, விஷாலி பிரசித் பிற்பகல் 3.15 மணியளவில் தனுஷ்கோடி அரிச்சல்முனையை வந்தடைந்தனர். பாக் நீரிணை கடல் பகுதியை 10 மணி நேரம் 45 நிமிடங்களில் நீந்தி கடந்த முதல் தம்பதி என்ற சாதனையை படைத்துள்ளனர். இருவருக்கும் மரைன் மற்றும் பாதுகாப்பு படை அதிகாரிகள் உற்சாக வரவேற்பு அளித்து வாழ்த்து தெரிவித்தனர்.