கோப்புப் படம்
சென்னை: மக்கள்தொகை கணக்கெடுப்பில் ஓபிசி பிரிவினரை மத்திய, மாநில அரசுகளால் வெளியிடப்பட்ட பட்டியலில் உள்ள சாதி பெயர்கள் அடிப்படையில் கணக்கெடுக்க வேண்டும் என்று மத்திய அரசை வலியுறுத்தி தமிழக சட்டப்பேரவையில் நேற்று ஒருமனதாக தீர்மானம் நிறைவேற்றப்பட்டுள்ளது.
சட்டப்பேரவையில் நேற்று பிற்படுத்தப்பட்டோர் நலத்துறை அமைச்சர் வே.சம்பத்குமார், மத்திய அரசின் 2027-ம் ஆண்டின் இந்திய மக்கள் தொகை கணக்கெடுப்பில் இதர பிற்படுத்தப்பட்ட வகுப்பினரின் (ஓபிசி) சாதி விவரங்களை மாநில மற்றும் மத்திய அரசுகளால் வெளியிடப்பட்ட பட்டியலில் உள்ள சாதிப் பெயர்களின் அடிப்படையில் மட்டுமே பதிவு செய்ய வேண்டும் என்று மத்திய அரசை வலியுறுத்தி அரசினர் தனி தீர்மானத்தை முன்மொழிந்து பேசியதாவது: நாட்டில் 1931-ல் முழுமையான சாதிவாரி கணக்கெடுப்பு நடத்தப்பட்டது.
இந்திய சுதந்திரத்துக்குப் பிறகு 2011 வரை நடைபெற்ற மக்கள்தொகை கணக்கெடுப்பில் எஸ்சி, எஸ்டி பிரிவினரின் சாதி விவரங்கள் மட்டுமே சேகரித்து வெளியிடப்பட்டது. 2027 மக்கள் தொகை கணக்கெடுப்பில் முதன்முறையாக முழு சாதிவாரி கணக்கெடுப்பு நடைபெறும் என அறிவிக்கப்பட்டு, முதல்கட்ட பணி முடிவடைந்துள்ளது. 2-ம் கட்டமாக பிப்.27-ம் தேதி நடைபெற உள்ள மக்கள்தொகை கணக்கெடுப்புக்காக விவரங்கள் சேகரிக்கப்பட உள்ள 40 வினாக்கள் அடங்கிய பட்டியலை மத்திய அரசு கடந்த மாதம் அறிவித்தது.
அதில் வினா எண் 10-ல் எஸ்சி, எஸ்டி மற்றும் சாதி தொடர்பான விவரங்கள் கேட்கப்படும் என அறிவிக்கப்பட்டுள்ளது. சாதி விவரங்களை வீடு வீடாக சென்று சேகரிக்கும் இந்த நிகழ்வில் எஸ்சி, எஸ்டி சாதியில் கணக்கெடுப்பு செயலியில் ஏற்கெனவே பதிவு செய்யப்பட்ட பட்டியலில் இருந்து நேரடியாக தேர்வு செய்யும் வகையில் சீராக அமைக்கப்பட உள்ளது.
ஆனால், பிற்படுத்தப்பட்ட மற்றும் மிகப் பிற்படுத்தப்பட்ட ஓபிசி வகுப்பினருக்கு சாதி என்ற பிரிவின்கீழ் பொதுமக்கள் தெரிவிக்கும் பெயர்களை நேரடியாக தட்டச்சு செய்யும் திறந்தவெளி பதிவு முறை பின்பற்றப்பட உள்ளதாக தெரிகிறது. இது ஓபிசி பிரிவினரின் பிரதிநிதித்துவம் கல்வி, வேலைவாய்ப்பில் பாதிப்பை ஏற்படும். அதற்காகவே இந்த தீர்மானம் கொண்டுவரப்படுகிறது. இவ்வாறு அவர் பேசினார்.
தீர்மானத்துக்கு ஆதரவாக அமைச்சர்கள் ஆதவ் அர்ஜூனா, ராஜேஷ்குமார், வன்னியரசு, ஷாஜகான் மற்றும் சி.வி.சண்முகம் (அதிமுக), போஜராஜன் (பாஜக), கணேஷ்குமார் (பாமக), மாரிமுத்து (இந்திய கம்யூனிஸ்ட்), செல்லசாமி (மார்க்சிஸ்ட்) ஆகியோர் ஆதரித்து பேசினர். பின்னர் குரல் வாக்கெடுப்பு மூலம் இத்தீர்மானம் ஒருமனதாக நிறைவேற்றப்பட்டது.