கரூர்: கரூரில் பறக்கும் படை, நிலையான கண்காணிப்புக் குழு சோதனைப் பணிகளை தொடங்கி மேற்கொண்டு வருகின்றன. மக்கள் கூடும் பொது இடங்களில் ஒட்டப்பட்டுள்ள சுவரொட்டிகளை தூய்மைப் பணியாளர்கள் அகற்றும் பணிகள் முடுக்கிவிடப்பட்டுள்ளது.
தமிழகத்தில் ஏப்.23-ம் தேதி தேர்தல் நடைபெறுகிறது. தேர்தல் நடத்தை விதிமுறைகள் அமலுக்கு வந்ததால் தொகுதி வாரியாக பறக்கும் படை, நிலையான கண்காணிப்புக் குழு உள்ளிட்டவைகள் நியமனம் செய்யப்பட்டு அறிவிக்கப்பட்டன.
இன்று (மார்ச் 16ம் தேதி) காலை 7 மணியளவில் கரூர் மாவட்ட சட்டப்பேரவைத் தொகுதிக்குட்பட்ட கரூர்- திருச்சி நெடுஞ்சாலையில் காந்தி கிராமம் பூங்கா பகுதியில் பறக்கும் படையினர், திண்ணப்பா நகர் அருகேயுள்ள புனித தெரசா பெண்கள் மேல்நிலைப் பள்ளி அருகே நிலையான கண்காணிப்புக் குழுவினர் வாகன சோதனைகளை மேற்கொண்டனர்.
இப்பள்ளி அருகேயுள்ள பயணியர் காத்திருப்புக் கூடத்தில் ஒட்டப்பட்டிருந்த சுவரொட்டிகள், அழகப்பா நகர் பகுதியில் சாலை மையத்தடுப்பில் ஒட்டப்பட்டிருந்த சுவரொட்டிகளை தூய்மைப் பணியாளர்கள் அகற்றும் பணியில் ஈடுபட்டனர்.
மேலும், மாவட்டம் முழுவதும் உள்ள 4 தொகுதிகளிலும் பறக்கும் படையினர், நிலையான கண்காணிப்புக் குழுவினர் வாகன சோதனை மேற்கொண்டு வருகின்றனர். உள்ளாட்சி அமைப்புகளை சேர்ந்த தூய்மைப் பணியாளர்கள் சுவரொட்டிகளை அகற்றும் பணியில் ஈடுபட்டு வருகின்றனர்.
ரூ.1 லட்சம் பறிமுதல்: கரூர் மாவட்டம் குளித்தலை அருகே கரூர் திருச்சி நெடுஞ்சாலையில் மருதூர் சுங்கச்சாவடி அருகே தேர்தல் பறக்கும் படையினர் நேற்றிரவு வாகன சோதனையில் ஈடுபட்டனர்.
அப்போது அவ்வழியாக வந்த காரை நிறுத்தி சோதனையிட்ட போது திருச்சி மாவட்டம் முசிறியை சேர்ந்த ரவிச்சந்திரன் மனைவி சாரதா (55) கைப்பையில் உரிய ஆவணங்களின்றி ரூ.1 லட்சம் வைத்திருந்தது தெரியவந்தது.
டெல்லியில் இருந்து திருச்சி விமான நிலையத்திற்கு தன் குடும்பத்தினருடன் வந்தவர் விமான நிலையத்தில் இருந்து முசிறி நோக்கி காரில் சென்றப்போது சோதனையில் சிக்கியது தெரியவந்தது.
பணத்தை பறிமுதல் செய்த பறக்கும் படையினர் குளித்தலை தேர்தல் நடத்தும் அலுவலரான சார் ஆட்சியர் சுவாதிஸ்ரீயிடம் ரூ.1. லட்சத்தை ஒப்படைத்தனர். அத்தொகை சார் நிலை கருவூலத்தில் செலுத்தப்பட்டது.