சென்னை: குற்ற வழக்குகளில் சாட்சியளிக்க ஆஜராகாத புலன் விசாரணை அதிகாரிகளுக்கு பிடிவாரன்ட் பிறப்பிக்க வேண்டுமென்ற தனி நீதிபதியின் உத்தரவுக்கு உயர் நீதிமன்றம் இடைக்காலத் தடை விதித்துள்ளது.
தன்னையும், தனது குடும்பத்தாரையும் ஊரை விட்டு ஒதுக்கி வைத்து கட்டப்பஞ்சாயத்து செய்தவர்கள் மீது நடவடிக்கை எடுக்கக் கோரி பழவேற்காட்டை சேர்ந்த ராஜ்கமல் என்பவர் சென்னை உயர் நீதிமன்றத்தி்ல் வழக்கு தொடர்ந்திருந்தார். இந்த வழக்கை ஏற்கெனவே விசாரித்த நீதிபதி பி.வேல்முருகன், மனுதாரர் அளித்த புகாரை சட்டப்படி பரிசீலித்து வழக்குப்பதிவு செய்து, இறுதி அறிக்கை தாக்கல் செய்யவும், மனுதாரர் குடும்பத்தினருக்கு உரிய பாதுகாப்பு வழங்கவும் பழவேற்காடு போலீஸாருக்கு கடந்த 2024-ம் ஆண்டு நவம்பரில் உத்தரவிட்டிருந்தார்.
ஆனால், போலீஸார் இந்த உத்தரவை அமல்படுத்தவில்லை என கூறி ராஜ்கமல் தாக்கல் செய்த நீதிமன்ற அவமதி்ப்பு வழக்கு நீதிபதி பி.வேல்முருகன் முன்பாக விசாரணைக்கு வந்தது.
அப்போது நீதிமன்றம் பிறப்பித்த உத்தரவு அமல்படுத்தப்பட்டு விட்டதாக காவல்துறை தரப்பில் அறிக்கை தாக்கல் செய்யப்பட்டது. அந்த அறிக்கையை ஏற்ற நீதிபதி, வழக்கி்ல் சாட்சியளிக்க நீதிமன்றத்தில் ஆஜராகாத புலன் விசாரணை அதிகாரிகளுக்கு எதிராக பிடிவாரன்ட் பிறப்பிக்க வேண்டுமென கீழமை நீதிமன்றங்களுக்கு ஏற்கெனவே உத்தரவிட்டிருந்தார்.
இந்த உத்தரவை எதிர்த்து தமிழக அரசு தரப்பில் உயர் நீதிமன்றத்தில் மேல்முறையீடு செய்யப்பட்டது. அதில், நீதிமன்ற அவமதிப்பு வழக்குக்கும், தனி நீதிபதியின் இந்த உத்தரவுக்கும் எந்த சம்பந்தமும் இல்லை.
எனவே, தனி நீதிபதியின் உத்தரவை ரத்து செய்ய வேண்டும் என கோரப்பட்டிருந்தது. இந்த மேல்முறையீட்டு வழக்கை விசாரித்த தலைமை நீதிபதி எஸ்.ஏ. தர்மாதிகாரி மற்றும் நீதிபதி ஜி.அருள்முருகன் ஆகியோர் அடங்கிய அமர்வு, இதுதொடர்பாக தனி நீதிபதி பிறப்பித்த உத்தரவுக்கு இடைக்காலத்தடை விதித்து, மேல்முறையீட்டு வழக்கு விசாரணையை 4 வாரங்களுக்கு தள்ளி வைத்துள்ளனர்.