திருப்பூர்: திருப்பூரில் பணியாற்றும் புதுச்சேரி, கேரளம், அசாம் மாநில வாக்காளர்களுக்கு ஏப்ரல் 9-ல் ஊதியத்துடன் விடுமுறை அளிக்க வேண்டும் என்று தொழிலகப் பாதுகாப்பு அதிகாரிகள் உத்தரவிட்டுள்ளனர்.
இதுகுறித்து தொழிலகப் பாதுகாப்பு மற்றும் சுகாதார இணை இயக்குநர்-1 வேலுமணி, இணை இயக்குநர்-2 சபீனா ஆகியோர் வெளியிட்ட அறிக்கையில் கூறியுள்ளதாவது: திருப்பூர் மாவட்டத்தில் உள்ள தொழிற்சாலைகள், கட்டுமான நிறுவனங்கள், பொதுத்துறை நிறுவனங்கள், நிதி நிறுவனங்கள் ஆகியவற்றில் புதுச்சேரி, கேரளம், அசாம் மாநிலங்களைச் சேர்ந்தவர்கள் பணியாற்றி வருகின்றனர்.
இதில், வாக்குரிமை உள்ள தினக்கூலி, தற்காலிக மற்றும் ஒப்பந்த தொழிலாளர்கள் உள்ளிட்ட அனைத்து தொழிலாளர்களுக்கும், அவர்களின் சொந்த தொகுதிகளுக்குச் சென்று வாக்களிக்க ஏதுவாக அந்த மாநிலங்களின் தேர்தல் நாளான ஏப்ரல் 9-ம் தேதி மக்கள் பிரதிநிதித்துவ சட்டத்தின்படி ஊதியத்துடன் கூடிய விடுப்பு வழங்கப்பட வேண்டும்.
அந்த மாநிலத் தொழிலாளர்களுக்கு வாக்குப் பதிவு நாளான ஏப்ரல் 9-ம் தேதி ஊதியத்துடன் விடுமுறை அளிக்காத தொழிற்சாலைகள் மற்றும் கட்டுமான நிறுவனங்கள் தொடர்பாக புகார் அளிக்கலாம்.
இதற்கு ஏதுவாக தொழிலகப் பாதுகாப்பு மற்றும் சுகாதார இயக்ககம் சார்பில் மாவட்ட அளவில் கட்டுப்பாட்டு அறை அமைக்கப்பட்டுள்ளது.
எனவே, இதுதொடர்பாக புகார்கள் ஏதேனும் இருப்பின் திருப்பூர் மாவட்ட கட்டுப்பாட்டு அதிகாரிகளான துணை இயக்குநர் 1 சந்தோஷ், துணை இயக்குநர் 2 ஜெயமுருகன், துணை இயக்குநர் 3 கார்த்திகேயன் ஆகியோரைத் தொடர்பு கொண்டு புகார்களைத் தெரிவிக்கலாம். இவ்வாறு அறிக்கையில் கூறப்பட்டுள்ளது.