மதுரை: பழநி கோயில் நிலம் மோசடியாகப் பதிவு செய்யப்பட்ட வழக்கில் தொடர்புடைய வெள்ளத்துரை என்பவர் முன்ஜாமீன் கோரி தாக்கல் செய்த மனுவை தள்ளுபடி செய்து உயர் நீதிமன்றம் உத்தரவிட்டது.
பழநி தண்டபாணி சுவாமிகள் மடத்துக்குச் சொந்தமான நிலம் மோசடியாகப் பதிவு செய்யப்பட்டுள்ளதாகக் கூறி அந்தப் பத்திரப் பதிவை உயர் நீதிமன்ற மதுரைக் கிளை அண்மையில் ரத்து செய்தது. இந்த வழக்கில் தொடர்புடைய பாப்பான்குளம் பகுதியைச் சேர்ந்த வெள்ளத்துரை என்பவர் முன்ஜாமீன் கோரி உயர் நீதிமன்ற மதுரைக் கிளையில் மனுத் தாக்கல் செய்தார்.
அதில் பழநி தண்டபாணி சுவாமிகள் மடத்துக்குச் சொந்தமான 1.4 ஏக்கர் நிலத்தை மோசடியாகப் பதிவு செய்துள்ளதாக என் மீது வழக்குப் பதிவு செய்யப்பட்டுள்ளது. நான் வழக்கு விசாரணைக்கு முழு ஒத்துழைப்பு வழங்குகிறேன். எனவே எனக்கு முன் ஜாமீன் வழங்க வேண்டும் என கோரியிருந்தார்.
இந்த மனு நீதிபதி ராஜசேகர் முன் விசாரணைக்கு வந்தது. மனுதாரர் தரப்பில், “நிலம் தொடர்பான வழக்கில் உரிமையியல் நீதிமன்றத் தீர்ப்பு மனுதாரருக்குச் சாதகமாக உள்ள நிலையில், பத்திரப்பதிவு செய்யப்பட்டுள்ளது. இதில் நிலத்தை வாங்கியவர் மீது குற்றவியல் நடவடிக்கை எடுக்க வேண்டியதில்லை” என தெரிவிக்கப்பட்டது.
அரசுத் தரப்பில், “சொத்தின் மதிப்பு 16 கோடி. ஆனால் மனுதாரர் 2 கோடி வழங்கியதாக மனுவில் தெரிவித்துள்ளார். அதோடு நிலத்தைப் பதிவு செய்யத் தீர்மானம் நிறைவேற்றியவர்களுக்கு ரூ.1 லட்சம் அனுப்பப்பட்டுள்ளது” என கூறப்பட்டது.
சந்தேகம் ஏற்படுகிறது
இதையடுத்து நீதிபதி, “மனுதாரர் மற்றும் விற்பனையாளர் முருகதாஸ் இருவரும் சேர்ந்தே இதனைச் செய்துள்ளதாகத் தெரிகிறது. இதுகுறித்து சிபிசிஐடி விசாரிக்கிறது. நிலத்தைப் பதிவு செய்யத் தீர்மானம் நிறைவேற்றியவர்களுக்கு பணம் அனுப்பப்பட்டுள்ளது சந்தேகத்தை ஏற்படுத்துகிறது. விசாரணை நடந்தால்தான் உண்மை தெரியும். இந்த நேரத்தில் முன்ஜாமீன் வழங்குவது விசாரணையைப் பாதிக்கும் எனக் கூறி முன்ஜாமீன் மனுவைத் தள்ளுபடி செய்தார்.