மதுரை: மதுரை மீனாட்சி அம்மன் கோயில் அறக்கட்டளை சொத்து முறைகேடு வழக்கில் 10 பேரின் முன்ஜாமீன் மனுக்கள் விசாரணையை ஆக.20-க்கு ஒத்திவைத்து உயர்நீதிமன்றம் உத்தரவிட்டது.
மதுரை மீனாட்சி அம்மன், கள்ளழகர் கோயில்களுக்கான அறக்கட்டளை சொத்துகளை முறைகேடாகப் பத்திரப் பதிவு செய்ததாக மீனாட்சி கோயில் இணை ஆணையர் செல்லத்துரை புகாரளித்தார். அதன் பேரில் 19 பேர் மீது மதுரை மத்திய குற்றப்பிரிவு போலீஸார் வழக்குப் பதிவு செய்தனர்.
இவ்வழக்கில் குற்றம்சாட்டப்பட்டுள்ள பிரேமா, முத்துராணி, கவிதா உள்ளிட்ட 10 பேர் தங்களுக்கு முன்ஜாமீன் வழங்கக் கோரி உயர்நீதிமன்ற மதுரை அமர்வில் மனுத் தாக்கல் செய்தனர். இம்மனு நீதிபதி முரளி சங்கர் முன் விசாரணைக்கு வந்தபோது அரசுத் தரப்பில் தலைமை குற்றவியல் வழக்கறிஞர் ஆஜராக இருப்பதால் கால அவகாசம் கேட்கப்பட்டது.
கோயில் தரப்பில், ‘முன்ஜாமீன் வழங்கக் கூடாது என இடையீட்டு மனுத் தாக்கல் செய்துள்ளோம். இதையும் சேர்த்து விசாரிக்க வேண்டும்,’ என கூறப்பட்டது. அனைத்து மனுக்களையும் ஆக.20-ம் தேதி விசாரணைக்கு ஏற்பதாக ஒத்தி வைத்து நீதிபதி உத்தரவிட்டார்.