தமிழகம்

தவெகவினர் 8 பேருக்கு நிபந்தனை முன்ஜாமீன்: ஐகோர்ட் உத்தரவு

செய்திப்பிரிவு

தேர்தல் நேரத்தில் திமுக-வினரை தாக்கியதாக பதிவு செய்யப்பட்ட வழக்கில் தவெகவைச் சேர்ந்த 8 பேருக்கு நிபந்தனை முன்ஜாமீன் வழங்கி உயர்நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.

கடந்த ஏப்.23-ம் தேதி நடந்த சட்டப்பேரவை தேர்தலின் போது, திருவல்லிக்கேணி சேப்பாக்கம் தொகுதிக்குட்பட்ட ராயப்பேட்டையில் திமுக வினர் வாக்காளர் சரி பார்ப்பு பணியில் ஈடுபட்டுக் கொண்டிருந்தனர். அப்போது, அங்கு வந்த தவெகவை சேர்ந்த ரதி, அவரது கணவர் பாஸ்கர், மகன் சூர்யா, கணவரின் தம்பி காந்தி மற்றும் தனுஷ், வாசுதேவன், கவுதமன், விக்னேஷ் ஆகிய 8 பேர் திமுகவினரை தாக்கி, மேஜை, நாற்காலிகளை சேதப் படுத்தியுள்ளனர்.

இது தொடர்பாக, திமுகவைச் சேர்ந்த கே.வி.மோகன் என்பவர் ராயப்பேட்டை காவல் நிலையத்தில் புகார் அளித்தார். அதன்பேரில், தவெகவைச் சேர்ந்த 8 பேர் மீதும் போலீஸார் வழக்குப் பதிவு செய்தனர். இந்த வழக்கில் தங்களுக்கு முன்ஜாமீன் வழங்கக் கோரி ரதி, பாஸ்கர் உள்ளிட்ட 8 பேரும் சென்னை உயர் நீதிமன்றத்தில் மனு தாக்கல் செய்திருந்தனர்.

இந்த மனு நீதிபதி பி.தனபால் முன்பாக விசாரணைக்கு வந்தது. அப்போது, மனுதாரர்கள் தரப்பில் ஆஜரான வழக்கறிஞர் ஜி.மோகன கிருஷ்ணன், "ஏற்கனவே ஐஸ் ஹவுஸ் காவல் நிலையத்தில் திமுகவினர் மீது மனுதாரர் புகார் அளித்ததால், அதற்கு பழிவாங்கும் நோக்கில் திமுகவினர் ராயப்பேட்டை காவல் நிலையத்தில் மனுதாரர்களுக்கு எதிராக பொய் புகார் அளித்துள்ளனர்.

அந்த புகாரை ராயப்பேட்டை காவல் ஆய்வாளர் விசாரணை நடத்தி உண்மைத் தன்மையை ஆராயாமல் மனுதாரர்கள் மீது பொய் வழக்கைப் பதிவு செய்துள்ளார். மனு தாரர்கள் மீது இதற்கு முன்பாக எந்த வழக்கும் நிலுவையில் இல்லை என்பதால் அனை வருக்கும் முன்ஜாமீன் வழங்க வேண்டும்" என வாதிட்டார்.

அதற்கு ஆட்சேபம் தெரிவித்து போலீஸார் தரப்பில் ஆஜரான குற்றவியல் வழக்கறிஞர் எஸ்.பாலாஜி வாதிட்டார்.

இரு தரப்பு வாதங்களையும் கேட்ட நீதிபதி, மனுதாரர்கள் ஏற்கனவே திமுகவினர் மீது புகார் அளித்ததால், அவர்களும் இவர்கள் மீது புகார் கொடுத்துள்ளனர். தேர்தல் பணி தொடர்பாக இரு தரப்பினருக்கும் இடையே பிரச்சினை இருந்துள்ளது. எனவே, இந்த வழக்கில் மனுதாரர்கள் 8 பேருக்கும் நிபந்தனை முன் ஜாமீன் வழங்கப்படுகிறது.

8 பேரும் சென்னை சைதாப்பேட்டை குற்றவியல் நடுவர் நீதிமன்றத்தில் ரூ.10 ஆயிரம் மதிப்பில் சொந்த ஜாமீன் மற்றும் அதே மதிப்பில் இரு நபர் ஜாமீனும் வழங்க வேண் டும். 4 வாரங்களுக்கு சனிக்கிழமை தோறும் ராயப்பேட்டை காவல் நிலையத்தில் ஆஜராகி கையெழுத்திட வேண்டும். நீதிமன்ற முன் அனுமதி பெறாமல் வெளிநாடுகளுக்கு செல்லக் கூடாது என நீதிபதி நிபந்தனை களை விதித்தார்.

SCROLL FOR NEXT