திருவள்ளூர்: கடல் உணவு பதப்படுத்தும் நிறுவனத்தில் ஏற்பட்ட அமோனியா வாயுக் கசிவு விபத்தில் ஏற்கெனவே 8 பெண் தொழிலாளர்கள் உயிரிழந்த நிலையில், மேலும் ஒரு பெண் தொழிலாளர் நேற்று உயிரிழந்தார். இதனால் இறந்தோரின் எண்ணிக்கை 9 ஆக உயர்ந்துள்ளது.
திருவள்ளூர் மாவட்டம், பெரியபாளையம் அருகே கன்னி கைப்பேர் கிராமத்தில் ‘செயின்ட்பீட்டர் அண்ட் பால் ஸீ ஃபுட்’ என்ற தனியார் நிறுவனம், இறால் உள்ளிட்ட கடல் உணவுப் பொருட்களை பதப்படுத்தி வெளிநாடுகளுக்கு ஏற்றுமதி செய்து வருகிறது.
இங்கு வடமாநிலங்களைச் சேர்ந்த 200-க்கும் மேற்பட்டோர் 2 ஷிப்டுகளில் பணியாற்றி வருகின்றனர். கடந்த 21-ம் தேதி காலை சுமார் 120 தொழிலாளர்கள் பணியில் ஈடுபட்டிருந்தபோது, திடீரென அமோனியா வாயுக் கசிவு ஏற்பட்டது.
இதனால் பணியில் இருந்த தொழிலாளர்கள், அருகில் தங்குமிடத்தில் ஓய்வெடுத்துக் கொண்டிருந்த பெண் தொழிலாளர்கள் உள்ளிட்ட 80 பேர் மயக்கமடைந்தனர். பலருக்கு கண் எரிச்சல், மூச்சுத் திணறல், வாய் மற்றும் மூக்கில் ரத்தக்கசிவு போன்ற பாதிப்புகள் ஏற்பட்டன.
பாதிக்கப்பட்டவர்கள் உடனடியாக மஞ்சங்காரணை வேல்ஸ் மருத்துவக் கல்லூரி மருத்துவமனை, சிறுணியம் வெங்கடேஸ்வரா மருத்துவமனை, சென்னை ஸ்டான்லி அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனை மற்றும் ராஜீவ்காந்தி அரசு பொது மருத்துவமனைக்கு அனுப்பி வைக்கப்பட்டனர்.
இதில் ஒடிசா மாநிலத்தைச் சேர்ந்த ஜுமானி ஜுவாங் (19), மாலோதி (20) ஆகிய இருவர் கடந்த 21-ம் தேதியும், ஒடிசா மாநிலத்தைச் சேர்ந்த ஷிபானி (22), கீதா ஜுங்கா (24), பர்பாவதி ஜுங்கா (19), ஷம்பபடி ஜுங்கா (23), பூர்ணிமா ஜுங்கா (19) மற்றும் அசாம் மாநிலத்தைச் சேர்ந்த ஷிட்டா ஹஸ்டா (20) ஆகிய 6 பேர் நேற்று முன்தினமும் சிகிச்சை பலனின்றி உயிரிழந்தனர்.
இந்நிலையில், சென்னை, ராஜீவ்காந்தி அரசு பொது மருத்துவமனையில் தீவிர சிகிச்சை பெற்று வந்த அஞ்ஜிலா சோரேன் (26) என்ற பெண் தொழிலாளர் நேற்று காலை சிகிச்சை பலனின்றி உயிரிழந்தார்.
வேல்ஸ் மருத்துவக் கல்லூரி மருத்துவமனையில் இருவர் சிகிச்சை பெற்று, தங்குமிடத்துக்கு அனுப்பப்பட்டுள்ளனர். மற்ற 69 பேர் தொடர்ந்து சிகிச்சை பெற்று வருகின்றனர். இதில் தீவிர சிகிச்சைப் பிரிவில் சிகிச்சை பெறும் 25-க்கும் மேற்பட்டவர்களில் பலரின் நிலை கவலைக்கிடமாக இருப்பதாக மருத்துவர்கள் தெரிவித்துள்ளனர்.
விவரம் சேகரிப்பு
உயிரிழந்தவர்களில் திருவள்ளூர் அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனை மற்றும் சென்னை, ஸ்டான்லி அரசு மருத்துவக்கல்லூரி மருத்துவமனையில் பிரேதப் பரிசோதனை செய்யப்பட்ட ஜுமானி ஜுவாங், மாலோதி, ஷிபானி, ஷம்பபடி ஜுங்கா மற்றும் கீதா ஜுங்கா ஆகிய 5 பேரின் உடல்கள் நேற்று ஒடிசா மாநில தொழிலாளர் நலத்துறை அதிகாரிகளிடம் ஒப்படைக்கப்பட்டு, விமானம் மூலம் ஒடிசா மாநிலத்துக்கு அனுப்பி வைக்கப்பட்டது.
விபத்து நடந்த நிறுவனத்தில் பணிபுரிந்து வந்த தொழிலாளர்களில், விபத்தில் சிக்காத, விபத்தில் சிக்கி சிகிச்சை பெற்று வரும் தொழிலாளர்களின் விவரங்களை அதிகாரிகள் சேகரித்து வருகின்றனர்.
முதல்கட்ட ஆய்வு அறிக்கை முதல்வரிடம் சமர்ப்பிப்பு
அமோனியா வாயுக் கசிவு விபத்தில் 9 தொழிலாளர்கள் உயிரிழந்த விபத்து குறித்து விரிவான விசாரணை நடத்தி அறிக்கை தாக்கல் செய்ய சிறப்புக் குழுவை முதல்வர் விஜய் அமைத்திருந்தார்.
தொழிலகப் பாதுகாப்புத் துறை இயக்குநர், சுகாதாரத் துறை கூடுதல் இயக்குநர், மாசுக் கட்டுப்பாடு வாரிய உறுப்பினர் செயலர் ஆகியோர் இதில் இடம் பெற்றிருந்தனர். 24 மணி நேரத்துக்குள் முதல்கட்ட அறிக்கையையும், 3 நாட்களுக்குள் முழு அறிக்கையையும் சமர்ப்பிக்குமாறு முதல்வர் உத்தரவிட்டிருந்தார்.
அதன்படி, நேற்று முதல்கட்ட அறிக்கையை அந்த குழு முதல்வரிடம் சமர்ப்பித்தது. அந்த அறிக்கையில், இந்த விபத்து நடந்த சம்பவத்தின் பின்னணி, பாதிப்பு நடந்த விதம், அதற்கான காரணங்கள், பாதித்தவர்களின் விவரங்கள், அரசு சார்பில் மேற்கொள்ளப்பட்ட மீட்பு நடவடிக்கைகள், மருத்துவ சிகிச்சைகள், சட்ட நடவடிக்கைகள் ஆகிய முதல் நிலை விசாரணையின் அடிப்படையிலான தகவல்கள் இடம்பெற்றன. முழுமையான விவரங்கள் அடங்கிய அறிக்கையை சில தினங்களில் குழுவினர் முதல்வரிடம் சமர்ப்பிக்க உள்ளனர்.