பொள்ளாச்சி: “2031ல் தமிழக மக்கள் முன்பு நம்முடைய அரசியல் கட்சி நிற்கும். 39 வயதுக்கு கீழே உள்ளவர்கள் 2026ல் தமிழகத்தில் ஒரு ஆட்சி மாற்றத்தை உருவாக்கினார்கள். அவர்கள் 2031ல் மற்றுமொரு ஆட்சி மாற்றத்தை நிச்சயம் உருவாக்குவார்கள்” என ‘வீ த லீடர்ஸ்’ இயக்கத்தின் தலைவர் அண்ணாமலை தெரிவித்துள்ளார்.
பொள்ளாச்சியில் இன்று நடைபெற்ற ‘போதைப்பொருள் இல்லாத தமிழகம்’ மாநாட்டில் பேசிய அண்ணாமலை, “இது என்னுடைய குடும்ப அமைப்பு கிடையாது. எந்த அழைப்பும் இல்லாமல் இத்தனை பேர் வந்துள்ளீர்கள் என்றால், தமிழகத்தில் நல்லது நடக்கும் என இவ்வளவு பேர் காத்திருக்கிறார்கள் எனத் தெரிகிறது. நாம் யாரையும் நம் இயக்கத்துக்கு வரும்படி அழைக்கவில்லை. நம் செயல்பாடுகளை பார்த்து மக்கள் நம்மிடம் இணைய வேண்டும்.
இப்போது வீ தி லீடர்ஸ் இயக்கத்தில் 19 லட்சம் பேர் இணைந்துள்ளனர். இந்த எண்ணிக்கை 50 லட்சமாக உயரும் போது தமிழக மக்கள் நம்மை அழைக்கின்றார்கள் என்று பொருள். இந்த 50 லட்சம் பேரும் தன்னார்வமாக நம்மோடு வர வேண்டும். இனி அடுத்த 6 மாதங்களில், ஒவ்வொரு மாதமும் ஒரு முக்கிய பிரச்சினையை மக்களிடம் கொண்டு செல்வோம். இதுகுறித்து நாம் மக்களிடம் தொடர்ந்து விழிப்புணர்வை ஏற்படுத்த வேண்டும்.
19 லட்சத்தில் 83 சதவீதம் பேர் ஆண்கள், 17 சதவீதம் பேர் பெண்கள் இருக்கிறார்கள். மாற்றம் வேண்டும் என இத்தனை சதவீதம் மகளிர் நம்மோடு இணைந்துள்ளனர். இதனை 50 சதவீதமாக மாற்ற வேண்டும். நம் அமைப்பில் 54 சதவீதம் பேர் 39 வயதுக்கு கீழே உள்ளனர். அவர்கள் மாற்றம் வேண்டும் என்று நினைக்கிறார்கள். 39 வயதுக்கு கீழே உள்ளவர்கள் 2026ல் தமிழகத்தில் ஒரு ஆட்சி மாற்றத்தை உருவாக்கினார்கள். அவர்கள் 2031ல் ஒரு மற்றுமொரு ஆட்சி மாற்றத்தை நிச்சயம் உருவாக்குவார்கள்.
இனி ஒவ்வொரு ஆண்டும் ஜூலை மாதம் போதைக்கு எதிரான மாதமாக இருக்கும். போதை இல்லாத தமிழகத்தை நம் காலத்தில் உருவாக்க வேண்டும். தவெக ஆட்சியை விமர்சிக்க வேண்டும் என என்னிடம் சொல்கிறார்கள். ஒரு கோடியே 68 லட்சம் பேர் ஓட்டு போட்டு இந்த ஆட்சியை கொண்டு வந்துள்ளனர். அதற்கு மரியாதை கொடுக்க வேண்டும். இவர்கள் 10 ஆண்டுகள் எம்எல்ஏக்களாக இருக்கவில்லை. அனைவரும் புதியவர்கள். செங்கோட்டையனை தவிர அமைச்சர்கள் அனைவரும் புதியவர்கள். அவர்கள் கொஞ்சம் தடுமாறத்தான் செய்வார்கள். அவர்களை தூக்கி பிடிக்க வேண்டும். அழுத்தக் கூடாது.
நாம் மூர்க்கத்தனமாக அதிகாரத்தை பிடிக்க வரவில்லை. நல்ல சமுதாயத்தை உருவாக்க வேண்டும் என்ற ஒரே நோக்கத்தில் இந்த அமைப்பு இருக்கும். எனவே இந்த ஆட்சியை ஒரு ஆண்டுக்கு விமர்சிக்க போவதில்லை. 2031ல் தமிழக மக்கள் முன்பு நம்முடைய அரசியல் கட்சி நிற்கும். நாம் ஆரோக்கிய அரசியலுக்காக நிற்போம், அற்ப அரசியலுக்காக நிற்க மாட்டோம். மக்கள் நமக்கு வாய்ப்பு தருவார்கள்” என்றார்