அண்ணாமலை
சென்னை: வட அமெரிக்கத் தமிழ்ச் சங்கப்பேரவையின் (ஃபெட்னா) தமிழ் விழா அமெரிக்காவின் நியூஜெர்சியில் நடைபெற்றது. இதில் ‘வீ த லீடர்ஸ்’ அமைப்பின் நிறுவனர் அண்ணாமலை சிறப்பு விருந்தினராக கலந்துகொண்டு பேசியதாவது: நான் ஃபெட்னா விழாவுக்குச் செல்வது குறித்து தமிழக ஊடகங்களில் பல்வேறு விவாதங்கள் எழுந்தன.
‘இந்துத்துவக் கொள்கையில் இருந்து அண்ணாமலை மாறுகிறாரா?’ என்ற கேள்விகள் முன்வைக்கப்பட்டன. இதற்கு கம்ப ராமாயணத்தின் யுத்த காண்டத்தில் வரும் கடவுள் வாழ்த்துப் பாடலையே பதிலாகக் கருதுகிறேன். ‘கடவுள் இருக்கிறார் என நம்புவோருக்கு அவர் இருக்கிறார்; இல்லை என்பவருக்கு இல்லை’.
நமது தமிழ் இனத்தை இந்து, முஸ்லிம், கிறிஸ்தவர் என ஒரு சிறிய வட்டத்தில் அடைக்கக்கூடாது. அதையெல்லாம் தாண்டி‘தமிழர்’ என்ற வட்டம் ஒரு பெரியவட்டமாக இருக்க வேண்டும். மதம் பின்னாளில்தான் வந்தது. ஆனால், ஒரு மனிதன் அறத்தோடு எப்படி வாழ வேண்டும் என்று கற்றுக்கொடுத்த மண்ணில் இருந்து நாம் வந்திருக்கிறோம்.
சினம் கொள்ளாமல், அமிர்தமே கிடைத்தாலும் பகிர்ந்து உண்டு, பிறர் நலனுக்காக உழைப்பதே உண்மையான தமிழனின் அடையாளம் என புறநானூறு நமக்கு கற்பிக்கிறது. சமுதாயம் ஒருவனை சாதியால் தரம் பிரிக்கலாம். ஆனால், ஒரு மனிதனிடம் அறிவு, கண்ணியம், ஒழுக்கம் இருந்தால், ஒரு மன்னனே அவனிடம் வந்து ‘என்னோடு படைக்கு வா’ என்று அழைப்பான்.
தமிழகத்தில் இலங்கைத் தமிழர்களை ‘அகதிகள்’ என்று அழைப்பது தவறான வார்த்தை. அவர்கள் புலம் பெயர்ந்தவர்கள். வட அமெரிக்காவில் மட்டும் 4 லட்சம் இலங்கைத் தமிழர்கள் வாழ்கின்றனர். போரால் பாதிக்கப்பட்டு உலகம் முழுவதும் வாழும் இலங்கைத் தமிழர்களுக்கு நமது காலத்திலேயே தகுந்த நியாயம் கிடைக்கச் செய்ய வேண்டும்.
அவர்களது உரிமைக்காக தொடர்ந்து குரல் கொடுப்பேன். கடந்த ஆண்டு பிரதமர் மோடி அமெரிக்கா வந்தபோது அவருக்கு நீங்கள் சிறப்பான வரவேற்பு அளித்தீர்கள். அதன் காரணமாக இந்த ஆண்டு நான் இங்கு வந்துள்ளேன்.
கடந்த 2024-ல் பாஜக வெளியிட்ட தேர்தல் அறிக்கையில், ‘உலகம் முழுவதும் தமிழ் இருக்கையை அமைப்போம்’ என்று தெரிவிக்கப்பட்டிருந்தது. அதைவிட ஒரு பெருமை தமிழனுக்கு என்ன இருக்க முடியும்.
தமிழ் மண்ணில் பிறக்காத ஒருவர் (பிரதமர் மோடி), உலகின் மூத்த மொழியான தமிழின் பெருமையைப் பேசுவது நமக்கு கர்வத்தையும், மகிழ்ச்சியையும் அளிக்கிறது.
ஃபெட்னா அமைப்பு கட்சிகளைக் கடந்து, சித்தாந்தங்களைதாண்டி, தமிழால் இணைய வேண்டும். அனைவரையும் தமிழால் இணைக்கக்கூடிய ஒருபொதுவான அமைப்பாக இருக்க வேண்டும்.
தமிழுக்கு ஆதரவாக நிற்பவர்களுக்கு துணைநிற்க வேண்டும் என விரும்புகிறேன். தமிழ் இனத்தை உலக அளவில் உயர்த்த நாம் அனைவரும் ஒன்றிணைந்து செயல்படுவோம். இவ்வாறு அவர் பேசினார்.