சென்னையை அடுத்த மாமல்லபுரத்தில் நடைபெற்ற பாமக பொதுக்குழு கூட்டத்தில் பேசிய அன்புமணி.
சென்னை: பாமக பொதுக்குழுக் கூட்டத்தில் அக்கட்சியின் தலைவராக அன்புமணி ஒருமனதாக தேர்வு செய்யப்பட்டார். காவிரி விவகாரத்தில் கர்நாடக அரசியல்வாதிகளிடம் இருக்கும் ஒற்றுமை இங்கு இல்லை என்று அவர் குற்றம்சாட்டியுள்ளார்.
பாமகவின் பொதுக்குழுக் கூட்டம், அக்கட்சியின் தலைவர் அன்புமணி தலைமையில் சென்னையை அடுத்த மாமல்லபுரத்தில் உள்ள அரங்கில் நேற்று நடைபெற்றது. பாமக நிறுவனர் ராமதாஸ், அரசியலில் இருந்து ஓய்வு பெறுவதாக அறிவித்துள்ள நிலையில், அவருடன் இணைந்து செயல்பட்டு வந்த தீரன், பு.த.அருள்மொழி உள்ளிட்ட முக்கிய நிர்வாகிகள் அனைவரும் அன்புமணி முன்னிலையில் இணைந்து, பொதுக்குழுவில் பங்கேற்றனர்.
பாமக தலைவராக அன்புமணி, பொதுச்செயலா ளராக ச.வடிவேல் இராவணன், பொருளாளராக ம.திலகபாமா உள்ளிட்டோர் ஒருமனதாக தேர்ந்தெடுக்கப்படுவதாக தீர்மானம் நிறைவேற்றப்பட்டது.
மேலும், சமூகநீதி கணக்கெடுப்பை உடனடியாக நடத்த தமிழக அரசு நடவடிக்கை எடுக்க வேண்டும், மேகேதாட்டு அணை விவகாரத்தில் கர்நாடகத்துக்கு ஆதரவாக செயல்படும் மத்திய அரசுக்கு கண்டனம், புதிய நடுவர்மன்ற கோரிக்கையையும், கர்நாடக அரசுடன் நேரடியாக பேச்சு நடத்தும் முடிவையும் கைவிட்டு, தமிழக அரசு விழிப்புடன் செயல்பட வேண்டும், பள்ளிக்கரணை உள்ளிட்ட 26,883 சதுப்பு நிலங்களையும் உடனடியாக எல்லைகளை வரையறுத்து அறிவிக்கை செய்ய வேண்டும் என்பன உள்ளிட்ட 31 தீர்மானங்கள் நிறைவேற்றப்பட்டன.
அதைத்தொடர்ந்து அன்புமணி பேசியதாவது: இந்த பொதுக்குழுவில் ராமதாஸ் பங்கேற்காதது வருத்தமாக இருக்கிறது. அவர் வரவில்லை என்றாலும் அவரது எண்ணமெல்லாம் இங்கேதான் இருக்கும். தமிழகத்துக்கு மட்டுமல்ல, இந்தியாவுக்கு எத்தனையோ சாதனைகளை பாமக செய்துள்ளது.
அதற்கெல்லாம் காரணம் ராமதாஸ். அவர் வாழும் காலத்தில் பாமக தமிழகத்தை ஆட்சி செய்ய வேண்டும். இது நிச்சயம் நடக்கும்.
கர்நாடகாவில் ஆட்சியில் உள்ள காங்கிரஸும், ஆட்சிக்கு வரத் துடிக்கும் பாஜகவும் சேர்ந்து தமிழகத்துக்கு தண்ணீர் வரவிடாமல் சதித் திட்டம் தீட்டிவருகிறார்கள் என்று கூறியதற்கு.
தமிழக காங்கிரஸ் கட்சியின் புதிய தலைவர் ஆவேசமாகப் பேசுகிறார். நாங்கள் எத்தனையோ போராட்டங்கள், சிறைகளைப்பார்த்து விட்டோம். தற்போது அமைதியாக, ஆக்கபூர்வமாக அரசியல் செய்து வருகிறோம். காவிரி விவகாரத்தில் கர்நாடக அரசியல்வாதிகளிடம் இருக்கும் ஒற்றுமை, தமிழக அரசியல்வாதிகளிடம் இல்லை.
அனைத்துக் கட்சி கூட்டத்தை தமிழக முதல்வர் கூட்ட வேண்டும். இது தவெக பிரச்சினையல்ல; தமிழகத்தின் பிரச்சினை. இவ்வாறு அவர் பேசினார்.