

சென்னை வண்ணாரப்பேட்டையில் ‘உதவும் கைகள்’ அறக்கட்டளை சார்பில், மறைந்த கம்யூனிஸ்ட் தலைவர் நல்லகண்ணுவின் மார்பளவு சிலை திறப்பு மற்றும் ‘அம்மாச்சி கற்பனையின் முதல் ஆசிரியர்’ - நூல் வெளியீட்டு விழாவில் பங்கேற்ற எதிர்க்கட்சித் தலைவர் உதயநிதி, இந்திய கம்யூனிஸ்ட் மாநிலச் செயலாளர் மு.வீரபாண்டியன் உள்ளிட்டோர்.
சென்னை: ‘மக்களுக்கான களப்போராளிகளைக் கொண்டாடு வதைவிட இன்ஸ்டாகிராமில் ரீல்ஸ் எடுப்பவர்களைத்தான் சமுதாயம் அதிகமாகக் கொண்டாடுகிறது’ என எதிர்க்கட்சித் தலைவர் உதயநிதி ஸ்டாலின் தெரிவித்தார்.
சென்னை வண்ணாரப்பேட்டையில் உள்ள ‘உதவும் கைகள்’ அறக்கட்டளை சார்பில், மறைந்த கம்யூனிஸ்ட் தலைவர் நல்லகண்ணுவின் மார்பளவு சிலை திறப்பு மற்றும் ‘அம்மாச்சி கற்பனையின் முதல் ஆசிரியர்’ என்ற நூல் வெளியீட்டு விழா நேற்று நடைபெற்றது.
இதில் சிறப்பு விருந்தினராக எதிர்க்கட்சித் தலைவர் உதயநிதி ஸ்டாலின் கலந்துகொண்டு நல்லகண்ணுவின் சிலையை திறந்துவைத்து, நூலைவெளியிட்டார். நிகழ்வில் இந்திய கம்யூனிஸ்ட் கட்சியின் மாநிலச் செயலாளர் வீரபாண்டியன் கலந்து கொண்டார்.
இந்நிகழ்ச்சியில் உதயநிதி ஸ்டாலின் பேசியதாவது: ஐயா நல்லகண்ணுவுக்காக முதல்முதலாக திறக்கப்பட்டுள்ள சிலையை திறந்து வைப்பதில் மிகுந்த மகிழ்ச்சி அடைகிறேன்.
நல்லகண்ணுவுக்கு சிலை வைத்ததன் மூலமாக, இன்று இந்த சமூகம் உண்மையிலேயே யாரைக் கொண்டாட வேண்டும் என்பதை இந்த அமைப்பினர் மிகத் தெளிவாக கூறியுள்ளார்கள்.
தற்போதெல்லாம், மக்களுக்கான களப்போராளிகளைக் கொண்டாடுவதைவிட இன்ஸ்டாகிராம், செல்போனில் ரீல்ஸ் எடுப்ப வர்களைத்தான் சமுதாயம் அதிகமாகக் கொண்டாடுகிறது. போராடினால் எதுவும் கிடைக்கும் என உறுதியாக நம்பியவர் ஐயா நல்லகண்ணு.
அதற்கு உதாரணம் பாலன் இல்லம், டெல்லியில் நடந்த போராட்டங்கள். நீட் குளறுபடிகளுக்கு எதிராக டெல்லியில் நடந்த போராட்டத்தை முடிந்துவிட்டது என நான் நினைக்கவில்லை இப்போதுதான் இந்த போராட்டம் தொடங்கியுள்ளது என்பது எங்களுடைய எண்ணம். இவ்வாறு அவர் பேசினார்.
முன்னதாக மு.வீரபாண்டியன் பேசும்போது, “அரசியலில் ஏற்ற இறக்கங்கள், நிலைப்பாடுகள் மாறுபடலாம். அதிமுக, திமுக, தவெக இயக்கங்களை ஜனநாயக இயக்கமாகத்தான் கம்யூனிஸ்ட் கட்சி பார்க்கிறது.
எங்களுக்கு ஒரே ஒரு எதிரி ஆர்எஸ்எஸ், பாஜகதான். சமரசம் இல்லாமல் அவர்களை எதிர்க்கிறோம். திமுகவுக்கும் கம்யூனிஸ்ட் கட்சிகளுக்கும் நீண்ட நெடுங்கால நெருங்கிய கொள்கை உறவு இருக்கிறது” என்றார்.