தமிழகம்

“பாமகவில் இருந்து ஏன் நீக்கக் கூடாது?” - ஜி.கே.மணிக்கு அன்புமணி தரப்பு நோட்டீஸ்

செய்திப்பிரிவு

கட்சிக்கு விரோதமாக செயல்படுவதால் பாமகவின் அடிப்படை உறுப்பினர் பொறுப்பில் இருந்து உங்களை ஏன் நீக்கக்கூடாது? என பாமக எம்எல்ஏ., ஜி.கே.மணிக்கு அக்கட்சியின் ஒழுங்கு நடவடிக்கை குழு நோட்டீஸ் அனுப்பியுள்ளது.

இதுதொடர்பாக பாமக தலைமை நிலையம் வெளியிட்ட அறிக்கையில் கூறியிருப்பதாவது: பென்னாகரம் தொகுதி பாமக எம்எல்ஏ ஜி.கே.மணி தொடர்ந்து கட்சி நலனுக்கும், கட்சி தலைமைக்கும் எதிராக செயல்பட்டு வருகிறார். அவரது அண்மைக்கால செயல்பாடுகள் எல்லாம் எல்லை கடந்தவையாக இருப்பதால், அதற்காக அவர் மீது கட்சியின் அமைப்பு விதியின் கீழ் நடவடிக்கை எடுப்பது குறித்து, பாமக ஒழுங்கு நடவடிக்கை குழு சென்னையில் கூடி விவாதித்தது.

அப்போது பாமக தலைவர் அன்புமணி மீது ஜி.கே. மணி பொய்யான குற்றச்சாட்டுகளையும், அவதூறுகளையும் கூறி அவற்றின் மீது நடவடிக்கை எடுக்கக்கோரி கடந்த டிச.6-ம் தேதி டெல்லி காவல் ஆணையரிடம் புகார் அளித்தது மற்றும் அன்புமணி மீது அவதூறு பரப்பும் வகையில் டிச.15-ம் தேதி சென்னையில் பத்திரிகையாளர்களுக்கு நேர்காணல் அளித்தது ஆகிய இரு கட்சி விரோத நடவடிக்கைகள் குறித்து அவரிடம் விளக்கம் கேட்க தீர்மானிக்கப்பட்டது.

இந்த இரு குற்றச்சாட்டுகளின் அடிப்படையில் பாமக அடிப்படை உறுப்பினரில் இருந்து ஏன் அவரை நீக்கக்கூடாது? என்பது குறித்து ஒரு வாரத்துக்குள் விளக்கம் அளிக்கும்படி ஜி.கே.மணிக்கு பாமக ஒழுங்கு நடவடிக்கை குழு சார்பில் நோட்டீஸ் அனுப்பப்பட்டுள்ளது. இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.

SCROLL FOR NEXT