சென்னை: ‘குற்றச் செயல்களில் ஈடுபட்டவர்கள் அனைவரும் எந்தக் கட்டுப்பாடும் இல்லாமல் திமுக ஆட்சியில் சுதந்திரமாக சுற்றி வருகின்றனர்’ என்று பாமக தலைவர் அன்புமணி குற்றம்சாட்டியுள்ளார்.
இது தொடர்பாக நேற்று அவர் வெளியிட்ட அறிக்கையில் கூறியிருப்பதாவது: தூத்துக்குடி மாவட்டம் விளாத்திகுளத்தை அடுத்த வேடநத்தத்தில் 12-ம் வகுப்பு மாணவி பாலியல் வன்கொடுமைக்கு உள்ளாக்கப்பட்டு படுகொலை செய்யப்பட்ட வழக்கில், ஏற்கெனவே ஜாமீனில் வெளியே வந்த ஒரு கொடூரனை காவல்துறையினர் கைது செய்துள்ளனர்.
மன்னிக்கவே முடியாத குற்ற செயல்களில் ஈடுபட்டவர்கள் அனைவரும் எந்த கட்டுப்பாடும் இல்லாமல் சுதந்திரமாக சுற்றி வருகின்றனர். அவர்களை கண்காணிக்கவோ, அவர்கள் மீண்டும் குற்றச் செயல்களில் ஈடுபடுவதைத் தடுக்கவோ காவல்துறை எந்த நடவடிக்கையும் எடுக்கவில்லை.
சாப விமோசனம்
தமிழகத்தின் சட்டம் - ஒழுங்கு சூழல் சந்தி சிரிக்கிறது. தமிழகத்தின் சாபக்கேடு என்றால் அது தற்போது நடைபெற்று வரும் திமுக ஆட்சி தான்.
தமிழகத்துக்கான சாப விமோசனம் ஏப்.23-ம் தேதி நடைபெறவுள்ள சட்டப்பேரவை தேர்தல்தான்.
அந்த தேர்தலில் பாமக, அதிமுக மற்றும் கூட்டணி கட்சிகளுக்கு மக்கள் வாக்களிப்பதன் மூலம் தமிழகத்துக்கு சாப விமோசனம் கிடைக்கும். இவ்வாறு அவர் தெரிவித்துள்ளார்.