தேர்தல் பிரச்சாரத்தில் அதிமுக பொதுச் செயலாளர் எடப்பாடி பழனிசாமி.
சிவகாசி: “இந்தியாவில் ஊழலுக்காக கலைக்கப்பட்ட ஒரே ஆட்சி கருணாநிதி தலைமையிலான திமுக அரசுதான். அந்த அளவுக்கு ஊழலையும் திமுகவையும் பிரிக்க முடியாது” என சிவகாசியில் நடந்த பிரச்சாரக் கூட்டத்தில் அதிமுக பொதுச் செயலாளர் எடப்பாடி பழனிசாமி பேசினார்.
சிவகாசி பேருந்து நிலையம் அருகே விருதுநகர் மாவட்டத்தில் உள்ள 7 தொகுதிகளில் போட்டியிடும் அதிமுக கூட்டணி வேட்பாளர்களை அறிமுகம் செய்து பழனிசாமி பிரச்சாரம் செய்தார். அப்போது அவர் பேசியது: “விருதுநகர் மாவட்டத்தில் 5 தொகுதியில் அதிமுக வேட்பாளர்களும், 2 தொகுதிகளில் கூட்டணி கட்சி வேட்பாளர்களும் போட்டியிடுகின்றனர்.
ராஜேந்திர பாலாஜி சிவகாசி தொகுதி வளர்ச்சிக்குப் பாடுபட்டவர். சிவகாசி பட்டாசு உலகளவில் புகழ்பெற்றது. பட்டாசு தொழிலுக்கு நெருக்கடி வந்த போது 20 எம்.பி-க்கள் தம்பிதுரை தலைமையில், துறை அமைச்சரை சந்தித்து பட்டாசு விற்பனைக்கு தடை கூடாது என்று கோரிக்கை வைத்தோம். பட்டாசு தொழிலை காப்பாற்ற நீதிமன்றத்தில் வாதாடியது அதிமுக அரசு. மீண்டும் அதிமுக ஆட்சி அமைந்தால் பட்டாசு, தீப்பெட்டி தொழில்கள் பாதுகாக்கப்படும்.
காவிரி - குண்டாறு திட்டம் மூலம் மேட்டூர் அணையின் உபரி நீரை கால்வாய் வெட்டி கொண்டு வருவது சிவகங்கை, புதுக்கோட்டை, விருதுநகர் மாவட்டத்தில் வேளாண்மை வளர்ச்சிக்கு உதவும். இத்திட்டத்திற்கு அதிமுக ஆட்சியில் ரூ.14 ஆயிரம் கோடி நிதி ஒதுக்கப்பட்டு, நான் அடிக்கல் நட்டு வைத்தேன். ஆனால், இத்திட்டத்தை திமுக திட்டமிட்டு முடக்கிவைத்துள்ளது. மீண்டும் அதிமுக ஆட்சியில் இத்திட்டம் நிறைவேற்றப்படும். இதன்மூலம் விருதுநகர் மாவட்டம் பசுமையாக மாறும். திமுக விவசாயிகள் விரோத அரசு என்பது இந்த திட்டத்தை முடக்கியதில் இருந்தே தெரிகிறது.
ரூ.400 கோடியில் நாம் கொண்டு வந்த மருத்துவக் கல்லூரி மருத்துவமனையை திமுக ஸ்டிக்கர் ஒட்டி திறந்தது. அதிமுக ஆட்சியில் ஒரே ஆண்டில் 11 மருத்துவக் கல்லூரிகள் கொண்டு வந்த நிலையில், திமுக ஆட்சியில் ஒன்று கூட வரவில்லை. அரசுப் பள்ளி மாணவர்களுக்கு 7.5 சதவீத இடஒதுக்கீட்டின் மூலம் 3 ஆயிரம் மாணவர்கள் மருத்துவ படிப்பில் சேர்ந்துள்ளனர்.
திமுக ஆட்சியில் சிறுமி முதல் மூதாட்டி வரை பாதுகாப்பில்லை. இப்படிப்பட்ட கேவலமான ஆட்சி தொடர வேண்டுமா? நிரந்தர டிஜிபி நியமிக்க முடியாத பொம்மை முதல்வர் தான் தமிழகத்தை ஆள்கிறார். நீதிமன்றம் உத்தரவிட்டும் டிஜிபி-யை நியமிக்கவில்லை.
எங்கே பார்த்தாலும் கஞ்சா, போதை மாத்திரை. பல ரூபத்தில் போதை பொருட்கள் விற்பனை செய்யப்படுகிறது. போதை ஆசாமிகளால் காவல் துறையை சேர்ந்தவர்களுக்கே பாதுகாப்பில்லை. போதை ஆசாமிகளால் கொலை, கொள்ளை, பாலியல் சீண்டல் நடக்காத நாளே இல்லை. டிஜிபி ஒருவர் கஞ்சாவை ஒழிக்க 2.0, 3.0, 4.0 என ‘ஓ’ போட்டுக்கொண்டே ஓய்வு பெற்றுவிட்டார். ஏனெனில், கஞ்சா விற்பதே ஆளுங்கட்சிக்கு துணை நிற்பவர்கள் தான். அதிமுக ஆட்சிக்கு வந்த 3 மாதங்களில் தமிழகத்தில் கஞ்சா ஒழிக்கப்படும்.
நான் இங்கு வரும்போது பெண் குழந்தைகள், ‘மீண்டும் அதிமுக ஆட்சி தான் பெண்களுக்கு பாதுகாப்பு, திமுக இனி எப்போதும் எங்களுக்கு வேண்டாம்’ என்று எழுதிய டி-சர்ட்டை என்னிடம் கொடுத்தார்கள். உங்கள் ஆட்சி மலரும், நீங்கள் பாதுகாப்பு கொடுங்கள், என்று கொடுத்தனர். குழந்தைகள் மனதில் கூட பிரச்சினை எப்படி ஆழமாக பதிந்துள்ளது என்பதை எண்ணிப் பார்த்து அதிமுக கூட்டணிக்கு வாக்களியுங்கள். கடந்த முறை திமுக ஆட்சியில் 525 அறிவிப்புகளில் நான்கில் ஒரு பங்கு கூட நிறைவேற்ற வில்லை. 2026 தேர்தல் வருவதால் மீண்டும் பொய் வாக்குறுதிகளை அளித்துள்ளனர்.
மின் கட்டணத்தை 52 சதவீதம் உயர்த்தியும், ஆண்டுக்கு 5 சதவீதம் உயர்த்தி மொத்தம் 67 சதவீதம் உயர்த்தி விட்டதால் அச்சகம் உள்ளிட்ட சிறு தொழில்கள் பாதிக்கப்பட்டு உள்ளது. சொத்து வரி, மின் கட்டண உயர்வு, குப்பை வரி விதித்த இந்த ஆட்சி மக்களுக்கு தேவையா?
நகராட்சி நிர்வாக துறையில் நடந்த ஊழல் குறித்து அதிமுக ஆட்சி அமைந்ததும் சம்பந்தப்பட்ட அமைச்சர் மற்றும் அதிகாரிகள் மீது நடவடிக்கை எடுக்கப்படும். திமுக ஆட்சியில் நிதியமைச்சராக இருந்த பி.டி.ஆர் தியாகராஜன் பேசியதாக வெளியான ஆடியோவில் முதல்வர் மகனும், மருமகனும் இரு ஆண்டுகளில் ரூ.30 ஆயிரம் கோடி சம்பாதித்து உள்ளதாக பேசியது குறித்து முதல்வர் இதுவரை பதில் அளிக்கவில்லை.
அத்தியாவசிய பொருட்கள் விலைவாசி உயர்வை கட்டுப்படுத்த நடவடிக்கை எடுக்கவில்லை. அதிமுக ஆட்சியில் விலை உயர்ந்த பொருட்களை வாங்கி கூட்டுறவு சங்கம் மூலம் குறைந்த விலைக்கு விற்பனை செய்தோம்.
இந்தியாவில் நம்பர் ஒன் மாநிலம் தமிழகம் என்கிறார் முதல்வர். ஊழல் செய்வதில் இந்தியாவில் நம்பர் ஒன் ஆட்சி திமுக அரசு. ஊழலுக்கு கலைக்கப்பட்ட ஓர் அரசு திமுக அரசு. ஊழலின் ஊற்றுக்கண் திமுக. திமுகவையும், ஊழலையும் பிரிக்க முடியாது.
73 ஆண்டுகள் பல கட்சிகளின் ஆட்சியில் ரூ.4.85 லட்சம் கோடி கடன் வாங்கப்பட்ட நிலையில், கடந்த 5 ஆண்டுகளில் ரூ.5 லட்சம் கோடி கடன் வாங்கி வைத்து விட்டார். ஆனால் ஸ்டாலின் மத்திய அரசு நிதி வழங்க வில்லை என்கிறார்.
கரோனா காலத்தில் வருவாய் இல்லாத போதிலும் மக்களை பாதுகாத்த அரசு அதிமுக. கரோனா காலத்தில் ரூ.40 ஆயிரம் கோடி செலவு செய்த போதும் நிதி நிலைமையை சரியாக வைத்துக் கொண்டோம். அந்த காலத்தில் பொங்கல் பரிசு, ஊக்கத்தொகை, மாணவர்களுக்கு ஆல் பாஸ் வழங்கினோம். ரூ.1.36 லட்சம் கோடி கூடுதல் வரி வருவாய் வந்த போதும் அதிக கடன் வாங்கி மக்களின் பணத்தை சுரண்டும் திமுக ஆட்சி தேவையா என மக்கள் சிந்திக்க வேண்டும்.
திமுக ஆட்சிக்கு வந்து 28 மாதங்கள் கழித்து தான் மகளிர் ஊக்கத்தொகை அளித்தனர். அதை அதிமுக தான் போராடி வாங்கி கொடுத்தது. அதிமுக ஆட்சி அமைந்ததும் மாதம் ரூ.2 ஆயிரம், குளிர்சாதன பெட்டி, 5 லட்சம் பெண்களுக்கு ரூ.25 ஆயிரம் மானியத்தில் இருசக்கர வாகனம் வழங்கப்படும். ஆண்கள் நகர பேருந்தில் கட்டணம் இன்றி பயணம் செய்யலாம். தீபாவளிக்கு பட்டு சேலை, ஆட்டோ வாங்க ரூ.75 ஆயிரம் மானியம், மாற்றுத்திறனாளிகள் மற்றும் நடைபாதை வியாபாரிகள் கூட்டுறவு கடன் தள்ளுபடி செய்யப்படும். 100 நாள் வேலை 150 நாளாக உயர்த்தப்படும். சிவகாசியை மாநகராட்சியாக தரம் உயர்த்தியது அதிமுக. மாவட்டத்தில் உள்ள 7 தொகுதிகளில் பல்வேறு பணிகள் செய்து கொடுத்து உள்ளோம். விருதுநகர் மாவட்டத்தில் 100 சதவீதம் வெற்றி பெற்று தர வேண்டும். ஸ்டாலின் மாடல் அரசு பெயிலியர் மாடல் அரசு. பை-பை ஸ்டாலின்” என்று அவர் பேசினார்.
இரட்டை இலை சின்னத்திற்கு முன்னாள் அமைச்சர் கே.டி.ராஜேந்திரபாலாஜி (சிவகாசி), வி.ஜி.கணேசன் (விருதுநகர்), சந்திரபிரபா( ஸ்ரீவில்லிபுத்தூர்), சோலை சேதுபதி (அருப்புக்கோட்டை), ராஜவர்மன் (திருச்சுழி), தாமரை சின்னத்திற்கு பிரிசில்லா பாண்டியன் (ராஜபாளையம்), சாத்தூர் தொகுதிக்கும் வாக்கு அவர் சேகரித்தார்.