தமிழகம்

சேப்பாக்கம்-திருவல்லிக்கேணி தொகுதியில் 3 வார்டுகளின் வாக்குச்சாவடிகள் பதற்றம்: தலைமை தேர்தல் அதிகாரியிடம் அதிமுக புகார்

செய்திப்பிரிவு

சேப்பாக்கம்-திருவல்லிக்கேணி தொகுதியில் 3 வார்டுகளில் உள்ள வாக்குச்சாவடிகளை பதற்றமானவையாக அறிவிக்க வேண்டும் என்று தலைமை தேர்தல் அதிகாரியிடம் அதிமுக மாவட்டச் செயலாளர் ஆதிராஜா ராம் புகார் மனு அளித்துள்ளார்.

அந்த மனுவில் கூறியிருப்பதாவது: நான் அதிமுக சார்பில் சேப்பாக்கம்-திருவல்லிக்கேணி தொகுதியில் வேட்பாளராகப் போட்டியிடுகிறேன். இத்தொகுதியில் தேர்தல் சுதந்திரமாகவும், நேர்மையாகவும் நடைபெறுவதற்கு அச்சுறுத்தலாக சில ஆளுங்கட்சி நிர்வாகிகள் செயல்பட்டு வருகின்றனர்.

          

114-வது வார்டு கவுன்சிலரும், மாநகராட்சியின் தேனாம்பேட்டை மண்டலத் தலைவராகவும் இருக்கும் மதன் மோகன், 116-வது வார்டு கவுன்சிலர் காமராஜ் என்கிற தனசேகர் ஆகியோர் தங்கள் பதவியை தவறாகப் பயன்படுத்தும் சூழ்நிலை உள்ளது.

இவர்கள் கடந்த கால தேர்தல்களில் வாக்காளர்களை மிரட்டுதல், வாக்குச் சாவடிகளை கைப்பற்ற முயற்சி செய்தல் போன்ற செயல்களில் ஈடுபட்ட காட்சிகள், செய்தி ஊடகங்களில் வெளியானது. இத்தொகுதி, முதல்வர் ஸ்டாலினின் மகனும், துணை முதல்வருமான உதயநிதி போட்டியிடும் நட்சத்திர தொகுதி. இதனால் இங்கு தேர்தல் பணியில் ஈடுபடும் மாநகராட்சி பணியாளர்களுக்கு இருவரும் அதிக அரசியல் அழுத்தம் தருகின்றனர். ஐஸ் ஹவுஸ் காவல் நிலையத்தில் காமராஜ், சரித்திர பதிவேடு குற்றவாளி என பதிவு செய்யப்பட்டுள்ளார்.

எனவே, தேர்தல் நிறைவடையும் நேரத்துக்கு முந்தைய 48 மணி நேரம் வரை மேற்கண்ட இருவரையும் வீட்டுக் காவலில் வைத்து கண்காணிக்க உத்தரவிட வேண்டும். மாநகராட்சியின் 114, 116, 120 ஆகிய வார்டுகளுக்கு உட்பட்ட வாக்குச் சாவடிகளை பதற்றமான வாக்குச்சாவடிகளாக அறிவிக்க வேண்டும். அனைத்து வாக்குச்சாவடிகளிலும் துணை ராணுவப்படை பாதுகாப்பு மற்றாம் வெப்காஸ்டிங் வசதி ஏற்படுத்தி 24 மணி நேரமும் கண்காணிக்க வேண்டும். இவ்வாறு மனுவில் கூறப்பட்டுள்ளது.

SCROLL FOR NEXT