தாம்பரத்தில் அதிமுக வேட்பாளர் சிட்லபாக்கம் ச.ராஜேந்திரனுக்கு உற்சாக வரவேற்பு அளிக்கப்பட்டது.
தாம்பரம்: முன்மாதிரி தொகுதியாக தாம்பரம் மாற்றப்படும் என, அத்தொகுதியில் போட்டியிடும் அதிமுக வேட்பாளர் சிட்லபாக்கம் ச.ராஜேந்திரன் தெரிவித்துள்ளார்.
தாம்பரம் தொகுதியில் போட்டியிடும் அதிமுக வேட்பாளர் சிட்லபாக்கம் ச.ராஜேந்திரன் இரட்டை இலை சின்னத்திற்கு வாக்கு கேட்டு நகரம் மற்றும் கிராமப் புறங்களில் தீவிர பிரசாரம் மேற்கொண்டார்.
அப்போது, ஆண்கள், பெண்கள் என வேறுபாடுகளின்றி அனைத்து தரப்பினருக்கும் திட்டங்கள் செயல்படுத்தப்படும். தமிழகத்திலேயே முன்மாதிரியான தொகுதியாக தாம்பரம் தொகுதியை மாற்றுவதற்கான அனைத்து திட்டங்களும் பழனிசாமி வழிகாட்டுதலின் பேரில் நிறைவேற்றப்படும்.
கடந்த அதிமுக ஆட்சியில் தொடரப்பட்ட அனைத்து திட்டங்களும் மீண்டும் தொடரும். பொய் வாக்குறுதி கூறி ஏமாற்றி ஆட்சியை பிடித்தவர்கள் திமுக. தாம்பரம் தொகுதி பொதுமக்கள் அரசு திட்டங்களை பெற்று பயனடைய லஞ்சம் தர வேண்டிய நிலை உள்ளது என கூறி இரட்டை இலை சின்னத்திற்கு வாக்கு சேகரித்தார்.
தாம்பரம் மார்கெட் பகுதியில் பிஎஸ்பி வேட்பாளர் ராஜா வாக்கு சேகரித்தார்.
பகுஜன் சமாஜ் கட்சி வேட்பாளர்
தாம்பரம் தொகுதியில் போட்டியிடும் பகுஜன் சமாஜ் கட்சி வேட்பாளர் ராஜா தொகுதிக்கு உட்பட்ட நகரம், கிராமங்களில் வீடு வீடாக நடந்து சென்று பொதுமக்களை சந்தித்து யானை சின்னத்திற்கு வாக்கு சேகரித்தார்.
தாம்பரம் மாநகராட்சியுடன் இணைய உள்ள இப்பகுதிகளில் தான் வெற்றி பெற்று சட்டப்பேரவை உறுப்பினர் ஆனவுடன், இப்பகுதிகளுக்கு பாதாள சாக்கடை திட்டம் செயல்படுத்தப்படும்.
மேலும், இப்பகுதிகளுக்கு பாலாறு மற்றும் மெட்ரோ குடிநீர் கிடைக்க வழிவகை செய்யப்படும்.
இப்பகுதியில் உள்ள அரசு பள்ளிகளின் தரம் உயர்த்தப்படும். பள்ளிகளில் நவீன கழிவறைகள் அமைக்கப்பட்டு, அனைவருக்கும் தரமான கல்வி உறுதி செய்யப்படும். மேலும், கடை வீதிகளில் துண்டு பிரசுரங்கள் வழங்கி வாக்கு சேகரித்தார்.